தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்கும் ஊசி கண்டுபிடிப்பு
தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்கும் ஊசி கண்டுபிடிப்பு
UPDATED : செப் 16, 2025 12:00 AM
ADDED : செப் 16, 2025 10:48 AM

குடகு:
தற்கொலை எண்ணம் உள்ளவர்களின் மனதை மாற்றும் வகையில், ஊசியை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது நல்ல பலனை அளித்துள்ளது.
இது தொடர்பாக, குடகின் மடிகேரி மாவட்ட அரசு மருத்துவமனை டாக்டர் ரூபேஷ் குமார் கூறியதாவது:
மக்களின் தற்கொலை எண்ணத்தை மாற்ற, புதிய சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல ஆய்வுகள் நடத்தி, ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளுக்கு செலுத்தி, வெற்றி அடைந்துள்ளது. ஒரு முறை இந்த ஊசி மருந்தை செலுத்தி கொண்டால், தற்கொலை எண்ணமே வராது.
தற்கொலைக்கு முயற்சித்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவோருக்கு, இந்த ஊசி போடப்படாது. அந்த நபரின் மனநிலை குறித்து, பல விதங்களில் பரிசோதனை செய்யப்படும். அவரை மன அழுத்தத்தில் இருந்து, வெளியே கொண்டு வர முயற்சிக்கப்படும். கவுன்சிலிங் அளிக்கப்படும். இத்தனைக்கு பின்னரும், அவருக்கு அவ்வப்போது தற்கொலை எண்ணம் தோன்றினால் மட்டுமே, அவருக்கு தெரியாமல் குளுக்கோஸ் வழியாக ஊசி செலுத்தப்படும்.
தற்போது தனியார் மருத்துவமனையிலும், இத்தகைய ஊசி கிடைக்கிறது. அங்கு சென்று ஊசி போட்டுக்கொள்ள, 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில், பி.பி.எல்., கார்டு இருந்தால் இலவசமாக ஊசியை போட்டு கொள்ளலாம். மடிகேரி மருத்துவமனையில் ஊசி போட்டுக் கொண்ட, 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.
மடிகேரி மாவட்ட மருத்துவமனை உட்பட, மாநிலத்தின் முக்கியமான அரசு மருத்துவமனைகளில், ஊசியை போட்டுக் கொண்டு தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடலாம். இது உயிர் காக்கும் மருந்தாக கருதப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.