UPDATED : மார் 27, 2026 06:05 PM
ADDED : மார் 27, 2026 06:06 PM
இன்றைய டிஜிட்டல் உலகில், இணையப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, இணையத் தாக்குதல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நிறுவனங்களின் தரவுகளைப் பாதுகாக்கும் 'சைபர் செக்யூரிட்டி அனலிஸ்ட்' பணிக்கு இந்தியாவில் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளன.
ஒரு நிறுவனத்தின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகள் மற்றும் கணினிகளை இணையத் திருடர்களிடமிருந்தும், அங்கீகரிக்கப்படாத ஊடுருவல்களிலிருந்தும் பாதுகாப்பதே இவர்களது முக்கிய பணி. இந்தியாவில் மொபைல் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்து வருவதால், 2025 முதல் 2030 வரை இத்துறை 20 சதவீத வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவைப்படும் திறன்கள்
இத்துறையில் நுழைய விரும்புபவர்களுக்குத் தொழில்நுட்பத் திறன்களுடன் சில தனிப்பட்ட திறன்களும் அவசியம். நெட்வொர்க் பாதுகாப்பு, பயர்வால்கள் அமைத்தல், ஊடுருவலைக் கண்டறிதல், மற்றும் பைத்தான் போன்ற ப்ரோகிராமிங் மொழிகளில் அடிப்படை அறிவு அவசியம். இதையடுத்து, பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், விவரங்களைக் கூர்ந்து கவனித்தல் மற்றும் இக்கட்டான நேரங்களில் பதற்றப்படாமல் செயல்படுதல் ஆகியவை மிக முக்கியம்.
கல்வித் தகுதி
கணினி அறிவியல், கணிதம் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில், இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பது வேலை வாய்ப்புகளை எளிதாக்கும். இருப்பினும், கூகுள் சைபர் செக்யூரிட்டி சான்றிதழ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்புகளை முடிப்பதன் மூலமும் இத்துறையில் நுழைய முடியும்.
தொடக்க நிலையில், 'ஜூனியர் அனலிஸ்ட்' ஆகப் பணியில் சேருபவர்கள், பிற்காலத்தில் செக்யூரிட்டி இன்ஜினியர், செக்யூரிட்டி ஆர்கிடெக்ட் போன்ற உயர் பதவிகளுக்குச் செல்ல முடியும். ஐ.டி., துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு, இது ஒரு பொன்னான வாய்ப்பு.

