ஈரோடு மாணவருக்கு அமெரிக்காவில் படிக்க ரூ.3.55 கோடி உதவித்தொகை!
ஈரோடு மாணவருக்கு அமெரிக்காவில் படிக்க ரூ.3.55 கோடி உதவித்தொகை!
UPDATED : ஆக 09, 2026 11:30 AM
ADDED : ஆக 09, 2026 11:30 PM

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோவுக்கு, அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகால இளநிலை பட்டப் படிப்பைத் தொடர ரூ.3.55 கோடி மதிப்பிலான முழு கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது. கல்விக் கட்டணம், தங்கும் செலவு முழுவதும் வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று, 1764ல் தொடங்கப்பட்ட பிரவுன் பல்கலைக்கழகம். உலகின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களாகக் கருதப்படும் ஹார்வர்டு, யேல், பிரின்ஸ்டன், கொலம்பியா உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ள 'ஐவி லீக்' அமைப்பில் பிரவுன் பல்கலைக்கழகமும் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பிரவீன் இளங்கோ, பொது சுகாதாரம் மற்றும் பயன்பாட்டுக் கணிதம் ஆகிய பாடங்களை படிக்க உள்ளார்.
இது குறித்து அவர் தினமலர் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
நான் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, ஈரோட்டைச் சேர்ந்த ஒரு அக்கா சிகாகோ பல்கலைக்கழகத்தில் முழு உதவித்தொகையுடன் படிக்கும் செய்தி வெளியானது. அதன் பிறகு, 9ம் வகுப்பில் இருந்தே உடன் படிக்கும் மாணவருடன் இணைந்து, தீவிர்மாக தனிப்பட்ட வளர்ச்சி, தலைமைத்துவ பயிற்சி, இதர திறன் வளர்ப்பதில் கவனம் செலுத்தினேன். பள்ளி படிப்பில் சிறந்து விளங்கியதோடு, பிரான்சில் நடந்த செஸ் போட்டியில் பங்கேற்றுள்ளேன்.
விண்ணப்ப முறை
இதுவரை, யு.எஸ்., ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் மொத்தம் 27 பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் விண்ணப்ப செயல்முறை சவாலானது. எனினும், பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை பெறுவதற்கு தேவையான தகவல்களை ஆன்லைனில் ஆராய்ச்சி செய்தும், வழிகாட்டிகளிடமிருந்தும் பெற்றேன். ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் தேவைகளும் மாறுபடும்; அவை அந்தந்த பல்கலைக்கழக இணையதளங்களில் தெளிவாக வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறையில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவில்லை. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. அமெரிக்காவில் உதவித்தொகை வழங்கும் சிறந்த பல்கலைக்கழகங்களில் பிரவுன் பல்கலைக்கழகமும் ஒன்று. பல்கலைக்கழகத்திற்கு மாணவர் சேர்க்கை மற்றும் உதவித்தொகை இரண்டையும் ஒரே நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நான்கு மாதங்களாக விண்ணப்பித்தலுக்கு தயாராகி, கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தேன். மார்ச் மாத இறுதியில் முடிவு வெளியானது. அதன் பிறகு, அமெரிக்காவின் மாணவர் விசா பெறுவதற்கான நடைமுறைகளில் கவனம் செலுத்தினே; சமீபத்தில் விசா கிடைத்தது. கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள், தங்குமிடம், சுகாதார காப்பீடு என முழு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
எதிர்காலத் திட்டம்
படிப்பை முடித்து, திறன்களை வளர்த்து, இந்தியாவுக்குத் திரும்பி பொது சுகாதாரத்தில் ஸ்டார்ட்அப் தொடங்க திட்டமிட்டுள்ளேன். முதுநிலை படிப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், இறுதி இலக்கு இந்தியாவில் 'ஸ்டார்ட்அப்' தொடங்குவதுதான்.
தெளிவான இலக்குகளை அடைவது எளிது
ஆரம்பத்திலேயே இலக்குகளை நிர்ணயித்து, கடினமாக உழைத்தால் எளிதாக அவற்றை அடையலாம். சாத்தியம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால், நிச்சயமாக வெற்றி பெறலாம்.
