UPDATED : செப் 17, 2025 12:00 AM
ADDED : செப் 17, 2025 09:35 AM

சென்னை:
தமிழகத்தில் 350 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உட்பட நாடு முழுதும், 6,850 இடங்களுக்கு அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
அதேநேரம், அடிப்படை கட்டமைப்பு இல்லாத மருத்துவ கல்லுாரிகளில், 1,056 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.அகில இந்திய மற்றும் மாநில மருத்துவ சேர்க்கையில், முதற்கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.
அதேநேரம், தேசிய மருத்துவ ஆணையம், புதிய இடங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலித்ததால், மூன்று வாரங்களுக்கு மேலாக இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம், கூடுதல் மருத்துவ இடங்கள் அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், பாரத், ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ வெங்க டேஸ்வரா, ஸ்ரீனிவாசன், செயின்ட் பீட்டர்ஸ், சுவாமி விவேகானந்தா, வேல்ஸ் ஆகிய ஏழு தனியார் மருத்துவ கல்லுாரிகளில், தலா 50 இடங்கள் என, கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.பி., மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருந்த நிலையில், 50 இடங்கள் குறைக்கப்பட்டு உ ள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகள், கூடுதலாக, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு விண்ணப்பித்த நிலையில், அவற்றுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கவில்லை.
நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, 6,850 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளன.
அடிப்படை கட்டமைப்பு இல்லாதது போன்ற காரணங்களால், 1,056 இடங்கள் குறைக்கப்பட்டு உ ள்ளன. இதன் வாயிலாக, மருத்துவ இடங்களின் எண்ணிக்கை, நாடு முழுதும் ஒரு லட்சத்து, 23,700 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில், 2,299 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க, மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.