தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப திறமையை வளர்க்கணும்!
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப திறமையை வளர்க்கணும்!
ஜூன் 22, 2026 10:40 AM
ஜூன் 22, 2026 10:40 AM

பாடத்தை தாண்டி மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் சொல்லித்தருவார்கள் என எதிர்பார்க்காமல், சுயமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு சமூகவலைதளங்களை பயன்படுத்தலாம். நேரத்தை வீணடிக்க, தேவையில்லாமல் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம்.
சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை வைத்து கல்லுாரியை தேர்வு செய்வது தவறானது. தற்போது, ஏ.ஐ., துறை வளர்ந்து வருகிறது. சொந்தமாக ஏ.ஐ., ஏஜென்ட் உருவாக்க தெரிந்திருக்க வேண்டும். பாடத்துடன் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கவுன்சிலிங் ரேங்க் வந்த பின் ஒப்பீடு செய்வது அவசியமாகும். இந்தாண்டு 'கட் - ஆப்' மதிப்பெணெ் குறையும். கல்லுாரிகள் பட்டியல் தயார் செய்து, அந்த கல்லுாரிகளின் கவுன்சிலிங் கோடு, கட்டணம் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்து ஒரு பேப்பரில் எழுதி கொள்ள வேண்டும்.
கல்லுாரிகளை தொடர்பு கொள்ளும் போது, கவுன்சிலிங் அழைப்புக்காக வழங்கிய மொபைல்போன் எண்ணில் அழைக்காமல் மாற்று எண்ணில் அழைத்து விபரங்களை கேட்டறிவது பயனாக இருக்கும். கவுன்சிலிங் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல்போன் எண்ணுக்கு மட்டுமே 'ஓ.டி.பி.,' வரும். அதை சரிபார்க்க, அவை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். 'சாய்ஸ்' பார்த்த பின்னர், அதை, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து வைக்க வேண்டும்.
சான்றிதழ்களை மூன்று ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வங்கியில் கல்வி கடன் விண்ணப்பிக்க உதவியாக இருக்கும். இன்ஜினியரிங் உயர் கல்வி படிக்க 'கேட்' தேர்வு குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். இரண்டாமாண்டு படிக்கும் போதே, 'கேட்' தேர்வு எழுத தயாராக வேண்டும். பொறியியல் படிப்புகளை தேர்வு செய்யும் போது, கூடுதலாக என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து படித்தால், பயனாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பங்களில் மாற்றங்கள் வந்து கொண்டே உள்ளது. எனவே, அதற்கேற்ப திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது கல்லுாரியில் பயில செல்லும் மாணவர்கள், 2030ம் ஆண்டு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, தயார்படுத்திக் கொள்வது அவசியம். திறமை, தொழில்நுட்பம் என, 'அப்டேட்' செய்து கொள்வது அவசியமாகும். அப்போது தான், வேலைவாய்ப்புகள் தேடி வரும்.
-ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்.
