மூன்றாவது திருமணம் செய்த தாய் காதலி கொலையில் வாலிபர் 'பகீர்'
மூன்றாவது திருமணம் செய்த தாய் காதலி கொலையில் வாலிபர் 'பகீர்'
ADDED : டிச 01, 2024 04:03 AM
இந்திரா நகர: அசாம் மாநிலத்தின் மாயா கோகாய், 19. இவரது காதலன் ஆரவ், 23. கேரளாவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 23ம் தேதி, இந்திராநகரில் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினர். அங்கு மாயாவை கொன்றுவிட்டு ஆரவ் தப்பினார்.
வாக்குமூலம்
இரண்டு நாட்களுக்கு முன்பு, பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் பதுங்கியிருந்த ஆரவை போலீசார் கைது செய்தனர். முதலில் கொலைக்கான காரணத்தை கூற மறுத்தார். பின், என்ன நடந்தது என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
போலீசில் அவர் கூறியிருப்பதாவது:
நானும், மாயாவும் டேட்டிங் செயலி மூலம் அறிமுகம் ஆனோம். பின், இருவரும் காதலித்தோம். ஓராண்டுக்கு முன்பு மாயா பெங்களூரு வந்தார். நானும், அவரும் ஜெயநகரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தோம். சில காரணங்களால் வேலையை விட்டு நின்றோம்.
அதன்பின்னர் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மாயா வேலைக்கு சேர்ந்தார். எனக்கு வேலை கிடைக்கவில்லை. மாயாவுக்கு ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதில் ஆர்வம் இருந்தது.
கத்தி, கயிறு
கடந்த சில மாதங்களாக, வேறு ஒருவருடன் அடிக்கடி மொபைல் போனில் பேசினார். அந்த நபருடன் பேச கூடாது என்று கண்டித்தேன். அவர் கேட்கவில்லை. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன்.
முன்கூட்டியே கத்தி வாங்கி வைத்திருந்தேன். நைலான் கயிறை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கினேன். மாயாவை கொலை செய்த பின்னர், தற்கொலை செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் மனதை மாற்றிக் கொண்டு தப்பிச் சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரவ் ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் அவரது தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தாத்தாவின் அரவணைப்பில் ஆரவ் வளர்ந்துள்ளார். ஆரவின் தாய், இரண்டாவது கணவரை விவாகரத்து செய்து, மூன்றாம் திருமணம் செய்துள்ளார்.
மூன்றாவது கணவரின் மூலம் ஆரவ் தாய்க்கு குழந்தை பிறந்து, தற்போது ஐந்து மாதங்கள் தான் ஆகின்றன. தாயின் நடவடிக்கையால் ஆரவ் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்துள்ளார். காதலியும் வேறு ஒருவருடன் பேசியதால், தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவார் என்ற பயத்தில், அவரை கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மூன்றாவது திருமணம் செய்த தாயின் செயல்பாட்டாலும், வேறு ஒருவருடன் சென்று விடுவார் என கருதி, காதலியை கொலை செய்ததாக போலீசாரிடம் கேரள வாலிபர் கூறியுள்ளார்.

