ADDED : மே 08, 2025 10:51 PM

விக்ரம்நகர்:“டில்லியில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்,” என, முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
டில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ரேகா குப்தா மற்றும் மாநில அமைச்சர்களுடன் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கூறியதாவது:
டில்லியில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும். நிலம், மின்சாரத் துறை தொடர்பான பிரச்னைகள் குறித்து மாநில அரசுடன் ஆலோசனை நடத்தினேன். டில்லி மக்கள் விரைவில் வசதிகளைப் பெறுவர்.
முந்தைய அரசாங்கங்களின் திறமையின்மை காரணமாக கடந்த 15 - 20 ஆண்டுகளாக பிரச்னைகள் நீடித்து வருகின்றன. டில்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சர்களை எங்கள் முதல்வர் ரேகா குப்தா தொடர்ந்து சந்தித்து, தீர்வுகளைப் பற்றி விவாதித்து வருகிறார்.
இவை அனைத்தும் இப்போதைக்கு முறைசாராதவை. விரைவில் முறையான கொள்கைகளை நாங்கள் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், “விரைவில் விஷயங்கள் நெறிப்படுத்தப்படும். இரட்டை இன்ஜின் அரசாங்கம் உள்ளது. நிலம் தொடர்பான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. நிலம் திரட்டும் கொள்கை, ப்ரீஹோல்ட் சொத்துக்கள் போன்றவை குறித்து விவாதங்கள் நடந்தன,” என்றார்.

