ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா; சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சிபிஆர் பங்கேற்பு
ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா; சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சிபிஆர் பங்கேற்பு
UPDATED : நவ 22, 2025 08:23 PM
ADDED : நவ 22, 2025 04:47 PM

புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்றுகளை வழங்கி உரையாற்றினார்.
ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கி, வரும் 24ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இதையொட்டி, ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 44வது பட்டமளிப்பு விழா, இன்று (நவ., 22) நடைபெற்றது.
பிரசாந்தி நிலையத்தில் உள்ள பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் ராகவேந்திர பிரசாத் துவக்க உரை நிகழ்த்தினார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராக பங்கேற்றார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் நாரா லோகோஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த விழாவில் இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் முதல் பொருளாதார நாடாக மாறும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். இதற்கு சத்ய சாய்பாபாவின் ஆசிர்வாதம் நிச்சயம் கிடைக்கும்.
சத்யசாய் கல்வி நிறுவன உயர்கல்வி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது மறக்க முடியாத நாள். இத்தனை மாணவர்கள், சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் ஒழுக்கமுடன் அமர்ந்திருப்பதை கண்டு பெருமிதம் அடைகிறேன். கல்வியில் மட்டுமல்ல சிறந்த ஒழுக்கம் கொண்டவர்களையும் இந்த சத்யசாய் கல்வி நிறுவனம் உருவாக்கி வருகிறது.
நாரா லோகேஷ், மாணவர்கள் அனைவரும் அரசியலில் சேருமாறு கூறினார். நீங்கள் நாட்டின் சிறந்த தலைவராக எதிர்காலத்தில் மாற வேண்டும். எதிர்கால தலைவர்களே மாணவர்களாகிய நீங்கள் தான்.
நாட்டின் உயர் பதவியில் இருக்கும் முதல் மூன்று பேர், கடந்த நான்கு நாட்களில் இங்கு வந்து விட்டனர்; பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அருள், அந்தளவுக்கு சக்தி வாய்ந்தது. சேவை என்பது வாழ்க்கை முறை என்பதை வலியுறுத்தும் வகையில் சாய்பாபா இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கினார்.
ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும்; எந்த எதிர்பார்ப்பும் இன்றி சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டும் என்பது இந்த கல்வி நிறுவனத்தின் நோக்கம்.
பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தருணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பீர்கள். இது ஒரு புதிய தொடக்கம் என்பதை மனதில் கொண்டு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை தொடங்க வேண்டும்.
இந்த மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். இந்த கல்வி நிறுவனம், மாணவர்களுக்கு அறிவு, திறமை மட்டுமின்றி, நல்ல குணாதிசயம், ஞானம் ஆகியவற்றையும் வழங்குகிறது. அதுதான் இந்த பல்கலையின் பெருமை. இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
மரியாதை
முன்னதாக பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மஹா சமாதியில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

