எல்லை பாதுகாப்பில் பெண்கள்: தயாராகும் பிரத்யேக முகாம்கள்
எல்லை பாதுகாப்பில் பெண்கள்: தயாராகும் பிரத்யேக முகாம்கள்
ADDED : டிச 29, 2025 03:55 AM

புதுடில்லி: இந்தியா - சீனா எல்லையில், பாதுகாப்பு பணியில் வீராங்கனையரை நிறுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள 32 சோதனைச்சாவடிகளில், வீராங்கனையருக்கென பிரத்யேக முகாம்களை கட்டும் பணியில், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, மத்திய ஆயுதப் படைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, மத்திய படைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா எல்லை பாதுகாப்பில், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்த படையில், 4,000 வீராங்கனையர் உள்ளனர். நடப்பு நிதியாண்டில் மேலும், 1,375 பெண்களை பணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
'எல்லையில், வீராங்கனையருக்கென பிரத்யேக சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும்' என, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் பிரவீன் கடந்த மாதம் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்தியா - சீனா எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள 32 சோதனைச்சாவடிகளில், வீராங்கனையருக்கென பிரத்யேக முகாம்களை கட்டும் பணியில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை முழுவீச்சில் இறங்கி உள்ளது.
இதன் மூலம், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் அருணாச்சல், ஹிமாச்சல், உத்தரகண்ட், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள இந்தியா - சீனா எல்லையில் வீராங்கனையர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

