UPDATED : நவ 21, 2025 06:41 PM
ADDED : நவ 21, 2025 11:46 AM

புதுடில்லி: கர்நாடகா முதல்வர் பதவியை டிகே சிவகுமாருக்கு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், காங்கிரஸ் தலைமையிடம் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றிவிட்டு, டி.கே. சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என பலமான விவாதங்கள் எழுந்தன. சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்து பல எம்எல்ஏக்களும் குரல் எழுப்பியதால் கர்நாடக அரசியலில் திடீர் சலசலப்பு உருவானது.
ஆனால் நான் 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பேன் என்று சித்தராமையா திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும், அடுத்தாண்டும் தானே பட்ஜெட் தாக்கல் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், டிகே சிவகுமாரும் மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறார்.இந்த நிலையில், துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர் நேற்று டில்லி சென்றுள்ளனர். அங்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசியுள்ளனர்.
கர்நாடகா காங்கிரஸ் அரசின் எஞ்சிய 2.5 ஆண்டு முதல்வர் பதவியை டிகே சிவகுமாருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதனைக் கேட்ட கார்கே, 'தலைவர் பொறுப்பு, அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட விவகாரத்தில் ராகுல் தான் முடிவெடுப்பார். இந்த கோரிக்கையுடன் டில்லி வருவதை முதலில் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஊடகங்கள் இந்த விவகாரத்தை வேறு மாதிரி கொண்டு சென்று விடுவார்கள்,' என்று காங்., எம்எல்ஏக்களிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நாளை கர்நாடகாவுக்கு செல்ல இருக்கிறார். இந்தப் பயணத்தின் போது, டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் மேலும் பலர் கார்கேவை சந்தித்து இதே கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, இன்றும் நாளையும் மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் செல்ல இருந்த முதல்வர் சித்தராமையா, தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
140 பேரும் எனது எம்எல்ஏக்கள்
டி.கே.சிவக்குமார் கூறியதாவது: கட்சியில் கோஷ்டி சேர்ப்பது எனத ரத்தத்தில் இல்லை. 140 எம்எல்ஏக்களும் எனது எம்எல்ஏக்கள். அரசு, அமைச்சரவையை மாற்றம் செய்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார். இதனால், அமைச்சராக வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். டில்லி சென்று தலைவர்களை சந்திப்பது அவர்களின் விருப்பம். அதற்கு நான் என்ன சொல்ல முடியும். சந்திப்பது அவர்களின் உரிமை. நான் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. காங்கிரஸ் தலைவர் கார்கேயை சிலர் சந்தித்துள்ளனர். சிலர் முதல்வரையும் சந்தித்துள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது. யாரும் அழைக்காமல் தாங்களாகவே சென்று சந்தித்தனர்.
காங்கிரசின் 140 எம்எல்ஏக்களும் முதல்வராகவும், அமைச்சர்களாகவும் வருவதற்கு தகுதி பெற்றவர்கள். எதுவேண்டுமானாலும் அவர்கள் ஆகலாம். 5 ஆண்டுகள் பதவியில் இருப்பேன் என முதல்வர் கூறியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். அவருடன் இணைந்து பணியாற்றுவோம். தலைவர்களை சந்திப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

