பழிவாங்கும் அரசியலை கைவிடுங்கள்; இலங்கை அரசுக்கு சொல்கிறார் காங் எம்பி சசி தரூர்!
பழிவாங்கும் அரசியலை கைவிடுங்கள்; இலங்கை அரசுக்கு சொல்கிறார் காங் எம்பி சசி தரூர்!
ADDED : ஆக 24, 2025 07:18 AM

புதுடில்லி: பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும் என இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைதுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, 76. அரசு நிதி முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரது கைதுக்கு, காங்கிரஸ் எம்பி சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை, மேலோட்டமாகப் பார்த்தால், அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்திருப்பது குறித்து கவலை கொள்கிறேன்.
உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவர் ஏற்கனவே சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இது அவர்களின் உள் விவகாரம் என்பதை முழுமையாக மதிக்கும் அதே வேளையில், பழிவாங்கும் அரசியலை இலங்கை அரசு கைவிட வேண்டும்.
முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பல தசாப்தங்களாக தேசத்திற்குச் சேவை செய்துள்ளார். அவர் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.