பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு; 24 மணிநேரத்தில் வாபஸ் பெற்றார் ராகுல்
பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு; 24 மணிநேரத்தில் வாபஸ் பெற்றார் ராகுல்
ADDED : ஆக 14, 2025 01:34 PM

புனே: தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை காங்கிரஸ் எம்பி ராகுல் வாபஸ் பெற்றார்.
கடந்த 2023ல் மார்ச் மாதம் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.,யுமான ராகுல் பேசுகையில், சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை விமர்சித்தார். ராகுலின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சாவர்க்கரின் உறவினர் சத்யாகி என்பவர் வழக்கு தொடுத்தார். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இதனிடையே, ராகுலின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் மிலிந்த் பவார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை செப்.,10க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ராகுலுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவரது வக்கீல் மிலிந்த் பவார் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில், மனு வாபஸ் பெறப்பட்டது.
இது குறித்து வக்கீல் மிலிந்த் பவார் கூறுகையில், 'ராகுலின் ஒப்புதல் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, வாபஸ் பெறப்பட்டுள்ளது,' என்றார்.