ADDED : டிச 13, 2024 11:01 PM
பெங்களூரு: பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மெட்ரோபாலிடன் போக்குவரத்துக் கழகம், கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக, மத்திய கணக்கு தணிக்கை குழு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பெங்களூரு நகரின் மக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்குவதில், பி.எம்.டி.சி., முக்கிய பங்கு வகிக்கிறது. நகரில் தினமும் 6,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. டிக்கெட் மூலம் பி.எம்.டி.சி.,க்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது.
காங்கிரஸ் அரசு வந்த பின், அரசு பஸ்களில் பெண்களுக்கு, இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலுக்கு வந்தது. இதனால் பஸ்களில், ஆண் பயணியர் மட்டும் டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின்றனர்.
இதனால் பி.எம்.டி.சி., உட்பட அரசின் நான்கு போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டத்தில் இயங்குவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றன. இதை அரசு மறுத்து வந்தது.
இந்நிலையில், பி.எம்.டி.சி., நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவது, மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் தெரியவந்துள்ளது.
மூத்த குடிமக்கள், மாணவர்களுக்கு சலுகை விலையில் பஸ் பாஸ்கள் வழங்கி வருவதாலும், பெண்கள் இலவச பயணம் செய்வதாலும், மாநில அரசு நிதி உதவி செய்யாததாலும் பி.எம்.டி.சி., நிர்வாகத்தின் நிதி நிலைமை மேம்படவில்லை.
பஸ்களின் இன்ஜின்கள், பேட்டரிகள், உதிரி பாகங்களை பராமரிக்க போதிய நிதி இல்லாததால், பஸ்களின் செயல்திறன் மோசமாக உள்ளது.
இதை சரிசெய்ய அவ்வப்போது பி.எம்.டி.சி.,க்கு, மாநில அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும், மத்திய கணக்கு தணிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு பின், பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாததும், நிதி நெருக்கடிக்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

