'ஆப்பரேஷன் சிந்துாருக்கு உதவிய இஸ்ரோ விஞ்ஞானிகள்'
'ஆப்பரேஷன் சிந்துாருக்கு உதவிய இஸ்ரோ விஞ்ஞானிகள்'
ADDED : செப் 10, 2025 03:56 AM

புதுடில்லி : “ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி தரவுகளை வழங்க, 400க்கும் மேற்பட்ட வி ஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்தனர்,” என, 'இஸ் ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாக்., பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, அந்நாட்டில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், நம் படைகள் அழித்தன.
இந்த நடவடிக்கையில், முப்படைகளின் பங்கு குறித்த தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, இஸ்ரோவின் பங்களிப்பு தெரிய வந்துள்ளது.
டில்லியில் நேற்று நடந்த அகில இந்திய மேலாண்மை சங்கத்தின், 52வது தேசிய மேலாண்மை மாநாட்டில், இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:
நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்காக, செயற்கைக்கோள் தரவுகளை இஸ்ரோ வழங்கி வருகிறது. அந்த வகையில், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மூலம் நம் படைகளுக்கு தேவையான தரவுகள் அளிக்கப்பட்டன.
அனைத்து செயற்கைக்கோள்களும் சரியாக வேலை செய்தன. இந்த பணியில், 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 24 மணி நேரமும் ஈடுபட்டனர். நாங்கள் வழங்கிய தரவுகள் மிகவும் துல்லியமாக இருந்தன. இவ்வாறு அவர் பேசினார்.