உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ககன்தக் -243' குண்டு வெற்றிகரமாக சோதனை
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ககன்தக் -243' குண்டு வெற்றிகரமாக சோதனை
ADDED : செப் 03, 2026 08:02 AM

புதுடில்லி: நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ககன்தக் -243 என்ற குண்டை, இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. விமானத்தில் இருந்து எதிரி நாட்டுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான குண்டுகள், பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
இதை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஜே.எஸ்.ஆர். டைனமிக்ஸ் மூலம் சறுக்கு குண்டுகள் (gliding bombs) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து ஏவப்பட்டதும், காற்று இயக்கத்தின் உதவியுடன் இலக்கை நோக்கி செல்லும் வகையில் இந்த குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
12 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கக்கூடிய விமானத்தில் இருந்து குண்டுகளை வீசினால், அது 144 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வரை தொலைவில் உள்ள இலக்குகளை சரியாக தாக்கும். இதனால், எதிரி நாடுகளின் வான்வெளிக்கு செல்லாமலேயே, அந்த நாடுகளில் இருக்கும் இலக்குகளை தாக்க முடியும்.
ககன்தக் -243 சறுக்கு குண்டு சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதன் மூலம் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி திறன் மேலும் வலுவடைந்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இந்திய விமானப்படை, எதிரிகளைத் தாக்கும் திறன் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இந்த சோதனை எங்கு நடத்தப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
