மந்தனா சதம்: இந்தியா அபாரம்; ஆஸி.,யை வீழ்த்தி பதிலடி
மந்தனா சதம்: இந்தியா அபாரம்; ஆஸி.,யை வீழ்த்தி பதிலடி
ADDED : செப் 18, 2025 12:44 AM

நியூ சண்டிகர்: மந்தனா சதம் விளாச, இந்திய அணி 102 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நேற்று, நியூ சண்டிகரில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மந்தனா விளாசல்
இந்திய அணிக்கு பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது பிரதிகா (25) அவுட்டானார். ஹர்லீன் தியோல் (10), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (17) நிலைக்கவில்லை. தஹ்லியா மெக்ராத் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மந்தனா, ஒருநாள் போட்டி அரங்கில் தனது 12வது சதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடிய மந்தனா, 91 பந்தில் 117 ரன்னுக்கு (4x6, 14x4) அவுட்டானார்.
பின் இணைந்த தீப்தி சர்மா (40), ரிச்சா கோஷ் (29) ஜோடி கைகொடுத்தது. ராதா யாதவ் (6), அருந்ததி ரெட்டி (4) ஏமாற்றினர். ஸ்னே ராணா (24) ஆறுதல் தந்தார். இந்திய அணி 49.5 ஓவரில், 292 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
தீப்தி அசத்தல்
சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி (9), ஜார்ஜியா (0) ஏமாற்றினர். பெத் மூனே (18) நிலைக்கவில்லை. எலிஸ் பெர்ரி (44), அனாபெல் (45) ஓரளவு கைகொடுத்தனர். தீப்தி சர்மா 'சுழலில்' ஆஷ்லி கார்ட்னர் (17), தஹ்லியா மெக்ராத் (16) சிக்கினர். அலானா கிங் (2) 'ரன்-அவுட்' ஆனார்.
ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவரில், 190/10 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.