குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்தால் ஆளுங்கட்சியே பொறுப்பு: மே.வங்க அரசை சாடிய ஐகோர்ட்
குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்தால் ஆளுங்கட்சியே பொறுப்பு: மே.வங்க அரசை சாடிய ஐகோர்ட்
UPDATED : ஏப் 04, 2024 05:41 PM
ADDED : ஏப் 04, 2024 05:24 PM

கோல்கட்டா: ‛‛ குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்தால், அதற்கு 100 சதவீதம் ஆளுங்கட்சியே பொறுப்பு '' என கோல்கட்டா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் சந்தேஷ்காலி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் வசித்த திரிணமுல் காங்கிரசின் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினரின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பு பெண்கள் புகார் கூறியதை அடுத்து ஷேக் ஷாஜகான் தலைமறைவானார். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், சந்தேஷ்காலியில் நடந்த சம்பவம் மிகவும் அவமானத்திற்குரியது. அங்கு நடந்த நிகழ்வுகளுக்கு மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் பொறுப்பானது. குடிமக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது அதற்கு, 100 சதவீதம் ஆளுங்கட்சியே பொறுப்பு. அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றனர்.

