பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி சிக்கினார்; போலி வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக புகார்
பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி சிக்கினார்; போலி வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக புகார்
ADDED : ஆக 04, 2025 12:36 AM

பாட்னா: தேர்தல் கமிஷன் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தன் பெயரே இல்லை' என, பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டிய நிலையில், 'அவர் காண்பித்த வாக்காளர் அடையாள அட்டை அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது அல்ல' என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் வாக்காளர் அடையாள அட்டையின் அசலை அளிக்குமாறும் தேர்தல் கமிஷன் அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. பீஹார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது.
அந்த வகையில், மரணம், இடம் பெயர்ந்தது, பல இடங்களில் இடம்பெற்றது போன்ற காரணங்களால், 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலையும் கடந்த 1ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்தது.
எதிர்ப்பு குரல் பீஹாரில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கைக்கு, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதன் முதலாக கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன.
தற்போது நடந்து வரும் பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரிலும் பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், தேர்தல் கமிஷன் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இடம்பெறவில்லை என கூறிஇருந்தார்.
ஐ.ஏ.எஸ்., போன்ற முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லை என தெரிவித்து இருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் திகா தொகுதி தேர்தல் பதிவு அலுவலர், தேஜஸ்வி யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
உங்கள் குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வரைவு வாக்காளர் பட்டியலில் 204வது ஓட்டுப்பதிவு மையத்தில் 416வது வரிசை எண்ணில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. பாட்னா கலெக்டர் இதை உறுதி செய்துள்ளார்.
கடந்த, 2020ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றிருந்த வாக்காளர் அடையாள அட்டை எண் தான், தற்போது திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
விசாரிக்க முடியும் தேர்தல் கமிஷன் சார்பில் உங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் ஆர்ஏபி0456228. ஆனால், செய்தியாளர் சந்திப்பின்போது நீங்கள் காண்பித்த வாக்காளர் அடையாள அட்டை எண் ஆர்ஏபி2916120. இந்த எண் தேர்தல் கமிஷனால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது அல்ல.
அதன்படி பார்த்தால், உங்களிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே செய்தியாளர் சந்திப்பின்போது காண்பித்த வாக்காளர் அட்டையுடன், அசல் வாக்காளர் அட்டையையும் அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் முழுமையாக விசாரிக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் எம்.பி., சுதாமா பிரசாத்தும் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது கட்சியும் பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.