இ.பி.எஸ்.,க்கு இரட்டை இலை: ஓ.பி.எஸ்., கோரிக்கைக்கு கைவிரித்தது தேர்தல் ஆணையம்
இ.பி.எஸ்.,க்கு இரட்டை இலை: ஓ.பி.எஸ்., கோரிக்கைக்கு கைவிரித்தது தேர்தல் ஆணையம்
ADDED : மார் 27, 2024 12:26 PM

புதுடில்லி: இ.பி.எஸ்., தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். அவர் பா.ஜ., கூட்டணியில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
அங்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார். இதனை வலியுறுத்தும் விதமாக தேர்தல் ஆணையத்தில் இரு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. அதில் பன்னீர்செல்வம் தரப்பினர் கூறியுள்ளதாவது:
‛‛ நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., எனவே இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் வழங்க வேண்டும்'', என ஒரு மனுவும், ‛‛ பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தரக்கூடாது. அ.தி.மு.க.,வுக்கான உரிமை கோரி நடைபெறும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைகாரணம் காட்டி, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், வரும் லோக்சபா தேர்தலில், எங்களுக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும்'' என்று மற்றொரு மனுவிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம், இ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதுடன், எங்களிடம் உள்ள ஆவணங்களில் இபிஎஸ் தான் பொதுச்செயலாளர் என உள்ளது எனக்கூறியுள்ளது.

