சாம்பல் ஆக்க முயற்சித்த நிலக்கரியை பாஜ., அரசு வைரமாக்கியது: நிர்மலா சீதாராமன்
சாம்பல் ஆக்க முயற்சித்த நிலக்கரியை பாஜ., அரசு வைரமாக்கியது: நிர்மலா சீதாராமன்
UPDATED : பிப் 10, 2024 01:01 AM
ADDED : பிப் 09, 2024 01:16 PM

புதுடில்லி : ‛‛ நிலக்கரியை ஐமுகூ., அரசு சாம்பல் ஆக மாற்றியது. ஆனால், எங்களது கொள்கைகளால் நாங்கள் நிலக்கரியை வைரமாக மாற்றினோம் ''' என லோக்சபாவில் வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து, நேற்று (பிப்.,08) லோக்சபாவில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் இன்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. வெள்ளை அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தின.
துணிவு உண்டா
இதற்கு மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: என்னை, எதர்க்கட்சிகளால் அமைதிப்படுத்த முடியாது. உண்மையை பேசுவேன். எனது உரைக்கு பதிலளிக்க எதிர்க்கட்சிகள் தயாரா? கேள்விகளை எழுப்பும் காங்கிரசுக்கு, பதிலை கேட்பதற்கான பொறுமையோ, துணிவோ கிடையாது.
10 ஆண்டுகள்
2008 ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ( ஐமுகூ) அரசு முறையாக கையாளவில்லை. அக்கூட்டணி சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயரை கெடுத்தது. கடும் சவால்களுக்கு மத்தியில், சரிவை நோக்கி சென்ற இந்திய பொருளாதாரத்தை மீட்டுள்ளோம். 2008 ல் உலக பேரிடரை எதிர்கொள்ள முடியாதவர்கள், எப்படி பேரிடரை எதிர்கொள்வது என எங்களுக்கு பாடம் எடுக்கின்றனர். ஐமுகூ., அரசின் தவறுகளை சரி செய்யவே 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
முதலைக் கண்ணீர்
சர்வதேச பிரச்னைகளை அக்கூட்டணி அரசை விட, தேஜ., கூட்டணி அரசு சிறப்பாக கையாண்டது. ஐமு.,கூட்டணிக்கு குடும்பமே பிரதானம். எங்களுக்கு தேசமே பிரதானம். கோவிட் காலத்தில் பிரதமர் மோடி முன்களத்தில் நின்று பணியாற்றினார். ஆனால், தற்போது எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.
காமன்வெல்த் ஊழல்
12 நாட்கள் நடந்த காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நடந்த ஊழலை உலக நாடுகள் அறியும். இந்த ஊழலால் ஒட்டு மொத்த தேசமும் வேதனை அடைந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த காமன்வெல்த் போட்டி தோல்வியடைந்தது. ஆனால், ஜி20 மாநாடு வெற்றி பெற்றது.
நிலக்கரி ஊழல்
ஐமுகூ., ஆட்சியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேட்டை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. இந்த ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. முந்தைய ஆட்சியின் போது, குட்கா தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்பட்டது. நிலக்கரி சுரங்கம் அமைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால், நிறுவனங்களால் மின்உற்பத்தி செய்ய முடியவில்லை. தேசம் இருளில் மூழ்கியது.
ஆனால், நாங்கள் பின்பக்க கதவு வழியாக எங்கள் உறவினர்கள் நிலக்கரி சுரங்க உரிமம் பெறுவதை தடுத்தோம். பா.ஜ., ஆட்சியில் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. நிலக்கரியை ஐமுகூ., அரசு சாம்பல் ஆக மாற்றியது. ஆனால், எங்களது கொள்கைகளால் நாங்கள் நிலக்கரியை வைரமாக மாற்றினோம் . இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

