UPDATED : அக் 29, 2025 09:29 AM
ADDED : அக் 28, 2025 03:44 PM

புதுடில்லி: டில்லி அரசு, ஐஐடி கான்பூருடன் இணைந்து டில்லியின் சில பகுதிகளில் செயற்கை மழைக்கான சோதனை நடத்தியது. ஆனால் சோதனை முயற்சி பலன் அளிக்கவில்லை. செயற்கை மழை பொழியவில்லை. இதற்கு ஈரப்பதம் குறைவாக இருப்பது தான் காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காற்று மாசுபாட்டை சமாளிக்க டில்லியின் மேக விதைப்பு செயல்முறை பணி தற்போது முடிவடைந்துள்ளது. வானிலை அனுமதித்தால் மாலையில் மற்றொரு சுற்று மேற்கொள்ளப்படலாம். இந்த செயல்முறை புராரி, மயூர் விஹார், கரோல் பாக் ஆகிய இடங்களில் செய்யப்பட்டது என்றனர்.
டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், டில்லியின் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதால், செயற்கை மழை பற்றிய பிரச்னை குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். மேக விதைப்பு டில்லியின் மாசு பிரச்னையை தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன், மேக விதைப்பு சோதனையையும் நடத்தியுள்ளோம். இது ஒரு பரிசோதனை. இதனால் என்ன நடக்கும் என்று பார்ப்போம். சோதனை வெற்றியடைந்தால், டில்லி மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு தீர்வு வெளிப்படும் என்று நான் நம்புகிறேன்.
டில்லியில் இது முதல் முறையாகும் என்பதால் இது நம் அனைவருக்கும் புதியது. ஆனால் இந்த சோதனை வெற்றிபெறவும், டில்லி இதனால் பயனடையவும் நான் பிரார்த்திக்கிறேன்.
இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் உத்தரபிரதேசத்தின் கான்பூரில் இருந்து புறப்பட்டது. டில்லி அரசின் தலைமையிலான இந்த முயற்சி கான்பூர் ஐஐடியுடன் இணைந்து செய்யப்பட்டது
இவ்வாறு ரேகா குப்தா கூறினார்.
மொத்தம் மூன்று முறை மேக விதைப்பு முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டது. மூன்று முறை முயற்சித்தும் மழை இல்லாத நிலையில், அரசு அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

