திகாரிலிருந்து கெஜ்ரிவால் ரிலீஸ்: முன்னை விட 100 மடங்கு வலிமை வந்துவிட்டதாம்
திகாரிலிருந்து கெஜ்ரிவால் ரிலீஸ்: முன்னை விட 100 மடங்கு வலிமை வந்துவிட்டதாம்
UPDATED : செப் 13, 2024 06:46 PM
ADDED : செப் 13, 2024 11:01 AM

புதுடில்லி: முன்னை விட 100 மடங்கு தனக்கு வலிமை வந்துவிட்டதாக நிபந்தனை ஜாமின் பெற்று திகாரிலிருந்து வெளியே வந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை அமலாக்கத்துறை, சி.பி.ஐ,. விசாரித்து வருகிறன்றன. இதில் நடந்த பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே வழக்கில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி சி.பி.ஐ, வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் வைத்தே கெஜ்ரிவாலை கைது செய்தது. இரு வழக்குகளும் டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சி.பி.ஐ. கைதுக்கு எதிராகவும், ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான பெஞ்ச் இன்று(செப்.,13) விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
* அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ., கைது செய்ததில் எந்த விதமான விதிமீறலும் இல்லை.
* கெஜ்ரிவாலை கைது செய்ததில் குற்றவியல் நடைமுறை சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன.
* ஜாமினில் வெளியே செல்லும் கெஜ்ரிவால் வழக்கு தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது. பிணைத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.
அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்தது. தற்போது சி.பி.ஐ., வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமினில் வழங்கி உள்ளது.
இதையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இன்று மாலை வெளியேவந்தார். ஆம் ஆத்மி கட்சியினர் அவரை வரவேற்றனர். பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பின் அவர் பேசியது, பா.ஜ.விற்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நான் தேசத்திற்காக என்னை அர்ப்பணித்தவன். கடவுள் என்பக்கமே உள்ளார். முன்னை விட நான் 100 மடங்கு வலிமையுடன் உள்ளேன் என்றார்.

