வங்கதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு! தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொடரும் வன்முறை
வங்கதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு! தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொடரும் வன்முறை
UPDATED : டிச 23, 2025 02:09 AM
ADDED : டிச 23, 2025 12:23 AM

டாக்கா: வங்கதேசத்தில், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. மாணவர் அமைப்பின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு மூத்த தலைவர் துப்பாக்கியால் நேற்று சுடப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் அமைப்பினர் கடந்தாண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.
அடுத்தாண்டு, பிப்., 12ல் வங்கதேச பார்லிமென்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன.
'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர், அடையாளம் தெரியாத நபரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன.
ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, தீவிர இந்திய எதிர்ப்பாளர்.
இந்த படுகொலைக்கு பின்னால் இந்தியா இருப்பதாக, அந்நாட்டின் மாணவர் அமைப்பின் சார்பில் துவங்கப்பட்ட புதிய அரசியல் கட்சியான என்.சி.பி., எனும் தேசிய குடிமக்கள் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா உள்ளிட்ட சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து, சில போராட்டக்காரர்கள் இந்திய துாதரகங்கள் மற்றும் ஹிந்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தினர்.
மேலும், மத நிந்தனை செய்ததாக கூறி, ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவரை அடித்துக் கொன்றதுடன், அவரது உடலை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தீயிட்டு கொளுத்தினர்.
இந்நிலையில், என்.சி.பி., யின் தொழிலாளர் அமைப்பான, 'ஜதியா ஸ்ராமிக் சக்தி'யின் குல்னா பெருநகரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான முகமது மொதாலெப் சிக்தார் என்பவரை, மர்ம நபர்கள் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டனர். இதில், சிக்தார் தலையின் இடது பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் அமைப்பின் கட்சியான என்.சி.பி.,யின் முக்கியத் தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிட முடியாது.
மற்றொரு முன்னாள் பிரதமரான கலீதா ஜியா கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வங்கதேச தேசியவாதக் கட்சியில் அடுத்த நிலைத் தலைவர்கள் இல்லாததால், பொதுத் தேர்தலை எப்படி சந்திக்கப் போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு மாணவர் போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது, பொதுத்தேர்தல் அமைதியாக நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

