எம்ஆர்ஐ பரிசோதனைக்கு மாற்று; மூளையை ஸ்கேன் செய்ய உதவும் ஐ.சி.எம்.ஆரின் கையடக்க கருவி!
எம்ஆர்ஐ பரிசோதனைக்கு மாற்று; மூளையை ஸ்கேன் செய்ய உதவும் ஐ.சி.எம்.ஆரின் கையடக்க கருவி!
ADDED : ஆக 24, 2025 09:11 PM

புதுடில்லி: மூளையை ஸ்கேன் செய்ய கையடக்க சாதனத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உருவாக்கியுள்ளது. இது கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கும், எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய இயலாத ஏழ்மையான மக்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.
சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ சோதனை பெரும்பாலான மக்களுக்கு அரிதான ஒன்றாக இருக்கிறது. கட்டணம் அதிகம்; எல்லா மருத்துவமனைகளிலும் இந்த வசதி இருக்காது என்பது போன்ற பிரச்னைகள் உள்ளன. இதற்கு, தீர்வு காணும் வகையில், மூளையை ஸ்கேன் செய்ய CEREBO என்ற கையடக்க கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உருவாக்கி உள்ளது.
இந்த கருவி சி.டி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேனர்கள் போன்ற மேம்பட்ட நோயறிதல் கருவிகள் அணுக முடியாத இடங்களில் பயனுள்ளதாக இருக்கும். இது மூளைக் காயத்தைக் கண்டறிய உதவியாக இருக்கும். இது செலவை குறைக்கும். இது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானது.
குறிப்பாக கிராமப்புறங்களில், மூளை காயங்களால் ஏற்படும் இறப்பை குறைக்கும் வகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி உள்ளது. பல்வேறு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது. CEREBO என பெயரிடப்பட்ட கையடக்க இயந்திரம், கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற மேம்பட்ட நோயறிதல் கருவிகளை விட மிக உதவிகரமாக இருக்கும். இந்த சாதனத்தை பயன்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இப்போது மாநில அரசுகளின் ஆதரவை நாடுகிறது.
இந்த கையடக்க சாதனம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் உபயோகப்படும். வெறும் 30 நிமிட பயிற்சியுடன், மருத்துவ ஊழியர்கள் இந்த சாதனத்தை இயக்க முடியும்.இது குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டாக்டர் ராஜிவ் பாஹ்ல் கூறியதாவது: ஆம்புலன்ஸ்கள், கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் பேரிடர் மீட்பு பிரிவுகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இந்த கருவி நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், பெங்களூருவின் மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் மற்றும் பயோஸ்கேன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரத்தை சோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிகமான உயிரிழப்புகள்!
உலகிலேயே இந்தியாவில் தான் தலையில் காயங்கள் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்கின்றன. இதனால் ஆண்டுதோறும் 1,00,000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தலையில் கடுமையான காயங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த சாதனம் உதவிகரமாக இருக்கும். மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் உறுதியாக உள்ளது.