பாக்., அடாவடிக்கு அதிர்ச்சி வைத்தியம்; நதி நீரை கட்டுப்படுத்த ஆப்கன் முடிவு
பாக்., அடாவடிக்கு அதிர்ச்சி வைத்தியம்; நதி நீரை கட்டுப்படுத்த ஆப்கன் முடிவு
ADDED : அக் 25, 2025 02:42 AM

காபூல்: இந்தியாவைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசும் பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள ப ஹல்காமில் சுற்றுலாப் பயணியர் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், கடந்த ஏப்ரலில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, நம் மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.
அணை மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி, நம் நாட்டில் இருந்து செல்லும் பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை மத்திய அரசு தடுத்துள்ளது.
இந்நிலையில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானும் தங்கள் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, 480 கி.மீ., நீளமுள்ள குனார் நதி, வடகிழக்கு ஆப்கானின் இந்து குஷ் மலைகளில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ப்ரோகில் கணவாய்க்கு அருகில் உருவாகிறது.
இது ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள் வழியாக தெற்கு நோக்கி பாய்ந்து, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் கலக்கிறது. இது குனார் மாகாணம் வழியாக பாய்ந்து வருவதால் குனார் நதி என பெயர் பெற்று, பின் காபூல் நதியுடன் இணைகிறது.
பாகிஸ்தானில் இந்த நதியை சித்ரால் நதி என அழைக்கின்றனர். காபூல் நதியுடன் இணைந்து பாகிஸ்தானுக்குள் நுழையும் குனார் நதி, இறுதியில் பாகிஸ்தானின் அட்டோக் நகருக்கு அருகே சிந்து நதியுடன் கலக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்குள் பாயும் இந்த குனார் நதியின் குறுக்கே அணைகளை கட்ட ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணைகள் கட்டப்பட்டால் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரின் அளவு குறையும்.
குனார் ஆற்றின் நீரோட்டம் குறைந்தால், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணம் வரையிலுமான நீர் பாசனம் மற்றும் நீர் தேவைகள் பாதிக்கப்படக்கூடும்.
உத்தரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்பகுதியான டுராண்த் கோடு அருகே நடந்த கடுமையான மோதல்களுக்கு பின் ஆப்கன் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அணை கட்டுமான பணிகளை முடிந்த வரையில் விரைவாக துவங்கும்படி, அந்நாட்டு நீர் மற்றும் எரிசக்தி துறை அமைச்சகத்திற்கு, தலிபான்களின் மூத்த தலைவர் மவ்லவி ஹிபதுல்லா அகுண்டுசாடா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்காக காத்திருக்காமல் கட்டுமான பணிக்கு ஆப்கானிஸ்தான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும்படி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் பங்கீடு குறித்து ஒப்பந்தம் இருப்பது போன்று, ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக முறையான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

