குஜராத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 3 பேர் கைது; ரசாயன தாக்குதல் திட்டம் முறியடிப்பு
குஜராத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 3 பேர் கைது; ரசாயன தாக்குதல் திட்டம் முறியடிப்பு
UPDATED : நவ 09, 2025 04:22 PM
ADDED : நவ 09, 2025 12:08 PM

காந்திநகர்: ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் 3 பேரை பயங்கரவாத தடுப்பு படையினர் குஜராத்தில் கைது செய்தனர்.
குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், கடந்த நவ.,6ம் தேதி குஜராத்தில் ஆயுதங்களை பரிமாற்றம் செய்ய வந்த போது, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், 35 வயதான அகமது சயீத் ஜீலானி என்பவன் சீனாவில் டாக்டர் பட்டம் பெற்று, ஹைதராபாத்தில் டாக்டராக செயல்பட்டு வந்துள்ளான். முகமது சுஹைல் முகமது சுலேமான் மற்றும் அசாத் சுலேமான் சைபி ஆகியோர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
பயங்கரவாத தடுப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், இந்த மூவரையும் அவர்கள் நீண்ட காலமாக கண்காணித்து வந்தனர். முதலில் முகமது சயீத் கைது செய்யப்பட்ட போது, அவரது காரில் இருந்து 3 துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள் மற்றும் ரசாயனப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சயீத் தான் இக்குழுவின் தலைவராக இருந்து, நிதி திரட்டுதல் மற்றும் தாக்குதல் நடத்தும் திட்டத்தை வகுந்து வந்துள்ளான்.
எஞ்சிய இருவரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரிசின் என்ற அதிக விஷத்தன்மை கொண்ட கெமிக்கலையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சயனைடை விட ரிசின் மிகக்கொடிய விஷத்தன்மை கொண்டதாகும். இதனை சுவாதித்தலோ, ஊசி மூலம் உடலில் செலுத்தினாலோ அல்லது வாய் வழியாக உட்கொண்டாலோ, உடனடி மரணம் ஏற்படும். எனவே, இவர்களை கைது செய்ததன் மூலம், மிகப்பெரிய ரசாயன தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

