இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
ADDED : டிச 24, 2025 07:18 PM

புதுடில்லி: விமானங்கள் சேவையை தொடங்குவதற்கு, அல் ஹிந்த் ஏர், ப்ளை எக்ஸ்பிரஸ் மற்றும் ஷாங்க் ஏர் ஆகிய 3 புதிய நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
இந்திய விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ விமான நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் பெரும்பாலான வழித்தடங்களில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. டிசம்பர் மாதத் தொடக்கத்தில், இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடியால், நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இண்டிகோ விமான நிறுவன பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு கண்டது. இந்நிலையில், விமானங்கள் சேவையை தொடங்குவதற்கு, அல் ஹிந்த் ஏர், ப்ளை எக்ஸ்பிரஸ் மற்றும் ஷாங்க் ஏர் ஆகிய 3 புதிய நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
அல் ஹிந்த் ஏர் மற்றும் ப்ளை எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த வாரம் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே ஷங்க் ஏர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷங்க் ஏர், 2026ல் விமான சேவைகளை தொடங்க உள்ளது. மேலும் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளால், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திகழ்கிறது.
பல விமான நிறுவனங்களை ஊக்குவிப்பதே அமைச்சகத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. 'உடான்' போன்ற திட்டங்கள், ஸ்டார் ஏர், இந்தியா ஒன் ஏர், ப்ளை91 போன்ற சிறிய விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமான நிலையங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய உதயம்
இந்த 3 விமான நிறுவனங்களிடம் இருந்தும் வழித்தடங்கள் மற்றும் பயன்படுத்தவிருக்கும் விமானம் குறித்து மத்திய அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கையை சமர்பித்த பிறகு விரைவில் இந்திய வானில் மூன்று புதிய விமான நிறுவனங்களும் தனது சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

