வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க பீஹாரில் 1.98 லட்சம் மனுக்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க பீஹாரில் 1.98 லட்சம் மனுக்கள்
ADDED : ஆக 31, 2025 02:28 AM

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, 1.98 லட்சம் பெயர்களை நீக்கக்கோரி மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பீஹாரில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆக., 1ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேலும் நாளை வரை தனி நபர்களும், அரசியல் கட்சிகளும் பெயர் சேர்க்கவோ, நீக்கவோ கோரிக்கை விடுக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கக்கோரி 1.98 லட்சம் மனுக்களும், பெயரை சேர்க்கக்கோரி 30,000 மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்தல் சட்டப்படி வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்கள் பெயர்களை சேர்ப்பதை எதிர்த்து போராட பொதுமக்களுக்கும், கட்சிகளுக்கும் உரிமை உண்டு.
அதே போல் தாங்கள் தகுதியுடையவர்கள் என கருதும் நபர்கள் பெயர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுக்கலாம்.
இந்த மாநிலத்தில் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பூத் அளவிலான ஏஜன்ட்கள் பெயர் சேர்க்கக்கோரி, 25 மனுக்களையும், நீக்கக்கோரி 103 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
பீஹாரில் உள்ள 7.24 கோடி வாக்காளர்களில், 99.11 சதவீதம் பேர் வாக்காளர் பெயர் சரிபார்ப்புக்காக அவர்களது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து வாக்காளர் இறுதி பட்டியல் செப்., 30ல் வெளியாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஆதார் உள்ளிட்ட 11 ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.