ADDED : மே 19, 2024 11:07 PM

அனந்த்நாக்: ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் பாராமுல்லா தொகுதிக்கு இன்று தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இரண்டு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுற்றுலா வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதி காயம்அடைந்தனர்.
அனந்த்நாகின் பகல்ஹாமில் சுற்றுலா பயணியர் குழுவினர் ஒரு இடத்தில் தங்கியிருந்தனர். அப்போது, அங்கு பைக்கில் வந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த தப்ரேஸ் மற்றும் அவரது மனைவி பர்ஹா காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த அரை மணிநேரத்தில், சோபியானின் ஹரிபோரா பகுதியில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அய்ஜாஸ் ஷேக், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, அனந்த்நாக் மற்றும் சோபியான்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

