திருச்சூரில் பகலில் வாணவேடிக்கை; பக்தர்கள் பெரும் ஏமாற்றம்
திருச்சூரில் பகலில் வாணவேடிக்கை; பக்தர்கள் பெரும் ஏமாற்றம்
ADDED : ஏப் 21, 2024 02:25 AM

திருச்சூர்: கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'வெடிக்கெட்டு' எனப்படும் வாணவேடிக்கை நிகழ்ச்சி, அதிகாலைக்கு பதிலாக வரலாற்றிலேயே முதன்முறையாக பகலில் நடந்தப்பட்டது பக்தர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
கேரளாவில் புகழ்பெற்ற வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரம் திருவிழா, இந்த ஆண்டும் நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தது.
பாரம்பரிய முறைப்படி, 30 யானைகளின் அணிவகுப்புடன் நடந்த 'வண்ணக் குடை மாற்றும்' நிகழ்ச்சியை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து ரசித்தனர். இதையடுத்து, நள்ளிரவு துவங்கி விடிய விடிய நடத்தப்படும் வாண வேடிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால், அதிகாலை 3:00 மணிக்கு துவங்கி விடிய விடிய நடக்கும் நிகழ்ச்சி, வழக்கத்துக்கு மாறாக, நேற்று காலை 7:00 மணி முதல் நடத்தப்பட்டது.
வண்ணமயமான ஒளிக்கீற்றுகளுடன், இரவில் நடத்தப்படும் 'வெடிக்கெட்டு' நிகழ்வு, வரலாற்றிலேயே முதன்முறையாக பகலில் வெளிச்சத்தில், அதுவும் குறைந்த நேரமே நடத்தப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதையடுத்து, நிகழ்ச்சி நடத்திய தேவசம் போர்டு அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிகழ்ச்சி நேரம் மாற்றப்பட்டதற்கு கேரள போலீசாரின் கட்டுப்பாடுகளே காரணம் என, அதை நடத்தும் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சர்ச்சை கேரள அரசியலிலும் எதிரொலித்தது.
இது குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான வி.டி.சதீசன் கூறுகையில், ''ஜாதி, மதம் கடந்த மக்கள் பங்கேற்கும் மதச்சார்பற்ற திருப்பூரம் திருவிழாவை மாநில அரசு வகுப்புவாதமாக மாற்ற முயற்சிக்கிறது.
''இந்த விழாவை நடத்துவதற்கான வழிமுறைகளை கேரள உயர் நீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், இதில் சட்டவிரோதமாக போலீசார் ஏன் தலையிடுகின்றனர்,'' என்றார்.

