ADDED : மார் 09, 2024 08:15 PM

லண்டன்:'பேங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு, 66.40 கோடி ரூபாயை திருப்பி செலுத்துமாறு, இந்தியாவிலிருந்து தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு, லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீரவ் மோடி ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேங்க் ஆப் இந்தியா, துபாயில் அமைந்துள்ள நீரவ் மோடியின், 'பயர்ஸ்டார் டைமண்டு' நிறுவனத்துக்கு, 83 கோடி ரூபாய் கடன் வழங்கியது. கடந்த 2018ம் ஆண்டு இந்தக் கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கி கேட்டபோது, நீரவ் மோடியால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இதை தொடர்ந்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் பேங்க் ஆப் இந்தியா வழக்கு தொடர்ந்தது.
மொத்தம் 66.40 கோடி ரூபாயை திரும்ப பெற்று தருமாறு அதில் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வங்கிக்கு இத்தொகையை திருப்பிச் செலுத்துமாறு நீரவ் மோடிக்கு உத்தரவிட்டுஉள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் உள்ள நீரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

