/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவீதமாக உயர்ந்தது
/
மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவீதமாக உயர்ந்தது
ADDED : செப் 15, 2025 11:54 PM

புதுடில்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஆகஸ்டில் 0.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன், தொடர்ந்து இரண்டு மாதங்களாக பணவீக்கம் மைனஸ் நிலையில் பதிவானது.
உணவு பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலை சற்று அதிகரித்ததே கடந்த மாத பணவீக்கம் அதிகரிக்க காரணம் என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரித்த போதிலும், உணவுப் பொருட்கள் பிரிவில் பணவாட்டமே நிலவியது. கடந்த ஜூலை மாதத்தில் 6.29 சதவீதமாக இருந்த பணவாட்டம், கடந்த மாதம் 3.06 சதவீதமாக குறைந்துள்ளது.
காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளிலும் பணவாட்டம் குறைந்துஉள்ளது.
எனினும், எரிபொருள் மற்றும் மின்சார பிரிவில் பணவாட்டம், கடந்த ஜூலை மாதத்தின் 2.43 சதவீதத்தில் இருந்து, கடந்த மாதம் 3.17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தயாரிக்கப்பட்ட பொருட்களின் பணவீக்கம் 2.05 சதவீதத்தில் இருந்து 2.55 சதவீதமாக அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய், ஜவுளி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துஉள்ளது.
பணவீக்க விகிதம் மைனஸில் செல்வதை பணவாட்டம் என்கின்றனர். அதாவது, பணவீக்கம் 0%க்கு கீழே குறைந்து எதிர்மறையாக மாறும் போது பணவாட்டம் ஏற்படுகிறது. பணவாட்டத்தின் போது, நாணயத்தின் மதிப்பு அதிகரித்து, அதே அளவு பணத்தை கொண்டு அதிக பொருட்களை வாங்க முடியும்