ADDED : ஜூலை 29, 2026 02:50 AM
பெங்களூரு: 'கிரஹ ஜோதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் தகவல்கள் சேகரிக்க மின்சார அளவீட்டாளர்கள் வீடு வீடாக செல்வதால், ஜூலை மாத கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, மூன்று மாத சராசரி கட்டணத்தை கணக்கிட்டு ரசீதுகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன' என, பெஸ்காம் அறிவித்து உள்ளது.
பெஸ்காம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
மாநில அரசின், 'கிரஹஜோதி' திட்டத்தின் கீழ், இலவச மின்சாரம் பெறும் பயனாளிகளின் தகவல்களை மீண்டும் சரிபார்க்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது. பயனாளிகளின் விபரங்கள், முகவரி, பயனர் தகவல் உட்பட பல்வேறு ஆவணங்களை சரிபார்க்க, மீட்டர் அளவீட்டாளர்கள் வீடு வீடாக சேகரித்து வருகின்றனர்.
ஊழியர்களின் பணிச்சுமை காரணமாக, ஜூலை மாதத்துக்கான மின்சார மீட்டர்களை அளவீடு செய்ய முடியவில்லை. எனவே, கடந்த மூன்று மாதங்களின் சராசரி மின்சார நுகர்வின் அடிப்படையில், கட்டண ரசீது தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போனில் குறுந்தகவல், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது.
எனவே, மீட்டர் அளவீட்டாளர் வீட்டுக்கு வரவில்லை என்றோ அல்லது கட்டண ரசீது வழங்கவில்லை என்றோ கவலைப்பட வேண்டாம்.
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, வழக்கம் போல, மீட்டர் அளவீடு மீண்டும் துவங்கும். வாடிக்கையாளர்களின் உண்மையான மின்சார நுகர்வின் அடிப்படையில் கட்டண ரசீதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
