பஸ் மீது பைக் மோதியதில் வாலிபர் பலி காதல் தோல்வியால் தற்கொலையா?
பஸ் மீது பைக் மோதியதில் வாலிபர் பலி காதல் தோல்வியால் தற்கொலையா?
ADDED : ஏப் 01, 2026 03:44 AM

விஜயபுரா: பஸ் மீது பைக் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதல் தோல்வியால் வேண்டுமென்றே பஸ் மீது மோதி வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உண்மையிலே விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விஜயபுரா மாவட்டம் சிந்தகி தாலுகா கண்ணொலி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் நேற்று காலை கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் முன்பக்கத்தில் அதிவேகமாக வந்த பைக் மோதியது. விபத்தால் பஸ்சில் தீ பரவ தொடங்கியது.
இதைப்பார்த்த, பஸ் ஓட்டுநர், நடத்துநர், பயணியர் என, பஸ்சில் இருந்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர். பஸ் முழுதும் எரிந்து நாசமானது. அதே சமயம், பைக்கில் வந்த வாலிபர் உயிருடன் எரிந்து உயிரிழந் தார். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சிந்தகி போலீசார், விசாரணையை துவங்கினர். பைக்கில் வந்த வாலிபர் விஜயபுராவை சேர்ந்த அபிஷேக், 25, என போலீசார் உறுதி செய்தனர்.
அவர் குறித்து போலீசார் விசாரித்ததில், சஞ்சனா என்ற பெண்ணை அபிஷேக் காதலித்து வந்தார். காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில் லை. வருத்தம் அடைந்த அவர், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இன்று என்னுடைய இறுதி நாள். இன்னும் சில மணி நேரத்தில் உயிரிழந்து விடுவேன். என் காதலை பிரித்த சஞ்னாவின் உறவினர்களான வீரேஷ் நந்துார், சைத்ரா, நவீன் பாட்டீல் ஆகிய மூவரே என் தற்கொலைக்கு காரணம்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னரே, அவர் விபத்தில் உயிரிழந்து உள்ளார்.
இதனால், அபிஷேக் உண்மையிலே விபத்தில் தான் உயிரிழந்தாரா அல்லது காதல் தோல்வியால் வேண்டுமென பஸ் மீது மோதி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
