ஜமகன்டி சிறையில் பயங்கரம் ஜெயிலர் மீது கைதிகள் தாக்குதல்
ஜமகன்டி சிறையில் பயங்கரம் ஜெயிலர் மீது கைதிகள் தாக்குதல்
ADDED : மே 11, 2026 11:18 PM
பாகல்கோட்: ஜமகன்டி சிறையில், கைதிகளுக்கு இடையை நடந்த அடிதடியை, கட்டுப்படுத்த சென்ற ஜெய்லரை, கைதிகள் தாக்கியதில் அவரது கை எலும்பு முறிந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி தாலுகாவின், மஹாலிங்கபுரா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, ஜாகிர் ஹுசேன் மகாந்தார் உட்பட, அவரது கூட்டாளிகள் சிலரை, சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இவர்கள் ஜமகன்டி புறநகரில் உள்ள சிறையில் அடைபட்டிருந்தனர்.
சிறையில் நேற்று முன் தினம் இரவு, ஏதோ காரணத்தால் ஜாகிர் ஹுசேனுக்கும், கூட்டாளிகளுக்கும் வாக்குவாதம் நடந்தது. பின், கைகலப்பாக மாறியது; ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதையறிந்த ஜெய்லர் கும்பாரா, கைதிகளின் சண்டையை விலக்குவதற்காக சென்றார். இதனால் கோபமடைந்த கைதிகள், ஜெய்லரை கண் மூடித்தனமாக தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார். இவரது இடது கை எலும்பு முறிந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக ஜமகன்டி ஊரக போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.
ஜெயிலரை தாக்கியது ஜாகிர் ஹுசேன் மகாந்தார், பயாஜ் மகாந்தார், அசோக் நாய்கோடி, அர்ஷாத் என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
