/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கைதிகளுக்கு மொபைல் போன் சிறை கண்காணிப்பாளர் கைது
/
கைதிகளுக்கு மொபைல் போன் சிறை கண்காணிப்பாளர் கைது
ADDED : அக் 27, 2025 03:44 AM

பரப்பன அக்ரஹாரா: பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகளுக்கு மொபைல் போன் கொடுத்த சிறை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள், சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழும் புகைப்படங்கள், வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது.
சிறையில் இருக்கும் ரவுடி சீனிவாஸ் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ, கடந்த மாதம் வெளியான நிலையில், சிறையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றும் அமர் பிராஞ்சே, 29, என்பவர் நேற்று முன்தினம் பணிக்கு வந்தார். சிறையின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில், கர்நாடக தொழில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் அமர் திரும்பி சென்றார். சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படையினர், அமரை நிறுத்தி விசாரித்தனர்.
அவரை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்திய போது, உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது.
கைதி ஒருவரிடம் 20,000 ரூபாய் லஞ்சமாக வாங்கி, அவருக்கு கொடுக்க உள்ளாடைக்குள் மறைத்து வைத்து மொபைல் போனை கடத்தி சென்றது தெரிந்தது.
சிறையின் இன்னொரு கண்காணிப்பாளர் பரமேஷ் அளித்த புகாரில், அமர் மீது பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதற்கு முன்பும் , சில கைதிகளிடம் பணம் வாங்கி கொண்டு, மொபைல் போன் கொடுத்தது தெரியவந்து உள்ளது.

