தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் விரைவில் நிர்ணயிக்க கர்நாடக அரசு முடிவு
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் விரைவில் நிர்ணயிக்க கர்நாடக அரசு முடிவு
ADDED : ஏப் 28, 2026 04:15 AM

சந்துார்: கர்நாடகாவில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை விரைவில் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்தார்.
பல்லாரி மாவட்டம், சந்துாரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது:
ஏறக்குறைய 80-க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான ஆலோசனைகள் இறுதி நிலையில் உள்ளன. இது விரைவில் அமலுக்கு வரும்.
தொழிலாளர்களின் உணவு, உடை, இருப்பிடத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் வரும் நாட்களில், மாநிலத்தில் புதிய குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனில் மாநில அரசு உறுதியாக உள்ளது. 'அம்பேத்கர் சஹாய ஹஸ்தா' திட்டம் போன்ற முன்னெடுப்புகள் மூலம் அவர்களை சமூகத்தில் நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் வினியோகப் பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, 'கிக்' தொழிலாளர்கள் மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கர்நாடகா.
ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் நலனுக்காக அரசு விரைவில் ஸ்மார்ட் கார்டுகளை வினியோகிக்கும். திரையுலகப் பணியாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சினிமா மசோதா மற்றும் வீட்டுப் பணியாளர்கள் மசோதா போன்ற புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் சராசரியாக 19,000 ரூபாயாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
