ADDED : மார் 30, 2026 04:40 AM
கோலார்: ''சட்ட விரோதமாக இயங்கிய 120 கிளினிக்குகள் மூடப்பட்டன,'' என்று கோலார் கலெக்டர் எம்.ஆர்.ரவி தெரிவித்தார்.
கோலார் மாவட்டத்தில் பொது சுகாதார நலன் கருதி, கோலார் கலெக்டர் எம்.ஆர்.ரவி தலைமையில் கே.பி.எம்.இ., என்ற கர்நாடக தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஆணைய கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பேசியதாவது:
சட்டவிரோத மற்றும் பதிவு செய்யப்படாத கிளினிக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோலார் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 152 அங்கீகரிக்கப்படாத கிளினிக்குகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் கிளினிக்குகள் முழுமையாக மூடப்பட்டன.
சட்ட விதிகளை மீறிய 18 கிளினிக்குகள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோத கிளினிக்குகளில் இருந்து இதுவரை 2 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், பங்கார்பேட்டை, சீனிவாசபுரா தாலுகாவில் தலா 50,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியிட்ட பின், 23 கிளினிக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஒன்பது கிளினிக்குகள் மீதான வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன.
முல்பாகலில் 32, கோலாரில் 31, என அங்கீகரிக்கப்படாத கிளினிக்குகள் இயங்கியது கண்டறியப்பட்டன. முல்பாகலில் அதிகபட்சமாக 9 கிளினிக்குகள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வ உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரோ அல்லது அமைப்போ மருத்துவ சேவைகளை வழங்குவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
