PUBLISHED ON : செப் 02, 2026

ஒரே நிலத்தில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் பருத்தி பயிர் செய்ய வேண்டும். பயிர்ச் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும். மறுதாம்பு கட்டைப்பயிர் விடக்கூடாது.
ஆண்டில் இருமுறை பயிர் செய்யும் போது தண்டு கூண்வண்டு, காய்ப்புழுக்கள் தாக்குதல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட பகுதியில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் பூச்சி, நோய் தாங்கி வளரும் ஒரே அறுவடை வயதுள்ள ரகத்தை தேர்ந்தெடுத்து ஒரே நேரத்தில் விதைக்க வேண்டும். அதிகபட்சமாக ஒருவார காலத்திற்குள் அப்பகுதி விவசாயிகள் விதைத்தால் எல்லாமே ஒரே பருவத்தில் அறுவடையாகும்.
விதைநேர்த்தி செய்த பிறகே விதைக்கவேண்டும். வயல் பெரிதாக இருந்தால் ஒவ்வொரு அரை ஏக்கருக்கு நடுவில் ஓரடி அகலத்திற்கு தடுப்புச் சுவர் போல நாற்று சோளத்தினை பயிரிட்டால் காற்றில் பறந்து வரும் மாவுப்பூச்சி, இலைப்பேன், தத்துப்பூச்சி ஆகியவை பருத்தி வயலில் நுழைவதை தடுக்க முடியும்.
ஊடுபயிராக மக்காச்சோளம், உளுந்து, சீனி அவரை பயிரிடுவதோடு வரப்பு பயிராக ஆமணக்கு, சூரியகாந்தி பயிரிட வேண்டும். வாய்க்கால், பாத்தி வரப்பு ஓரங்களில் தட்டைபயறு வளர்த்தால் பொறிவண்டுகள் இனப்பெருக்கத்திற்கு உதவும்.
இரட்டை வரிசையில் பருத்தியும் இடைவெளியில் ஒரு வரிசை உளுந்து அல்லது சீனி அவரை (கொத்தவரை) ஊடுபயிராக பயிரிட வேண்டும். உளுந்து பயிரிட்டால் தத்துப்பூச்சி தாக்குதல் குறையும்.; சீனி அவரை பயிரிட்டால் தத்துப்பூச்சி, காய்ப்புழு தாக்குதல் குறையும். இவற்றால் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து உற்பத்தி செய்யப்பட்டு மண்வளம் அதிகரிக்கும்.
