/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
காபிக்குத் தேவை கவாத்து... களையெடுப்பு
/
காபிக்குத் தேவை கவாத்து... களையெடுப்பு
PUBLISHED ON : மார் 04, 2026

கொடைக்கானல் பெரியூரில் 5 ஏக்கரில் காபி, அவகோடா, எலுமிச்சை, மிளகு, ஜாதிக்காய், கிராம்பு என இயற்கை விவசாய முறைப்படி பயிர்களுக்கு இடையே ஊடுபயிர் சாகுபடி செய்கிறார் விவசாயி சக்திவேல்.
டிகிரி முடித்து மதுரையில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் 2017ல் பெரியூரில் 4.5 ஏக்கர் தோட்டம் வாங்கினேன். 3 ஏக்கரில் காபி, அவகோடா, எலுமிச்சை, ஒன்றரை ஏக்கரில் காபி, மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, அரை ஏக்கரில் ஏலம் பயிரிட்டுள்ளேன். அனைத்துமே இயற்கை சாகுபடி தான் என்று விவரித்தார் சக்திவேல். 3 ஏக்கரில் அவகோடா நாட்டு ரகத்தை ஒரு ஏக்கருக்கு 50 வீதம் 3 ஏக்கரில் 150 கன்றுகளை 2019ல் நடவு செய்தேன். ஐந்தாம் ஆண்டிலிருந்து காய்ப்புக்கு வருகிறது. ஒரு மரத்தில் இருந்து அதிக பட்சமாக ஒரு டன் வரை பழங்கள் கிடைக்கும். ஐந்தாண்டு கழித்து காய்ப்பதால் விளைச்சலும் நன்றாக இருக்கும்.
பல ஆண்டுகள் பயன்தரும். கோடை காய்ப்பில் கொஞ்சமாக பழங்கள் காய்க்கும். அடுத்தது ஆடியில் தொடங்கி கார்த்திகை மாதம் வரை காய்ப்பு தொடரும். தினமும் 50 கிலோ பழங்கள் கிடைக்கும். வியாபாரிகளிடம் காயைப் பொறுத்து கிலோ ரூ.250 முதல் ரூ.300க்கு விற்கிறேன். இதில் ஊடுபயிராக அரேபியா ரக காபி, எலுமிச்சை பயிரிட்டுள்ளேன்.
காபிச்செடியில் இருந்தும் வருமானம் கிடைக்கிறது. இயற்கை விவசாயம் என்றால் உரமோ, மருந்தோ வைப்பதில்லை. களையெடுப்போம், கவாத்து செய்வோம். அவகோடா மரங்களில் இருந்து விழும் இலைகள் காய்ந்து உரமாகிறது. களையை பறித்து நிலத்தில் இடுவதால் அதுவும் உரமாகிறது. மழையை நம்பி பயிர் வளர்கிறது. களைகளைப் பறித்து அப்படியே உரமாக மாற்றி விடுவோம். ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்வோம்.
ஏலத்தில் லாபம்
அரை ஏக்கரில் பூர்வீக இடத்தில் 250 ஏலச்செடிகள் வளர்க்கிறேன். 3 மாதத்திற்கு ஒருமுறை ஆர்கானிக் உரம், வேப்பம் புண்ணாக்கு இடுகிறேன். ஆட்டுக்கிடை அமைத்து ஆட்டு உரம் தருகிறோம். களைகளை பறித்து அப்படியே நிலத்தில் விட்டு விடுவோம். 45 நாட்களுக்கு ஒருமுறை பூச்சி தாக்குதலை தடுப்பதற்காக மருந்து தெளிக்கிறோம்.
ஆண்டில் பத்து மாதங்கள் காய்க்கும் என்பதால் 10 முறை முறை காய் பறிப்போம். ஒவ்வொரு முறை காய் பறிப்பின் போது 10 கிலோ அளவு கிடைக்கும். பச்சை ஏலத்தை புகைமூட்டம் செய்து பதப்படுத்தி காயவைத்து போடி ஏல மையத்தில் கிலோ ரூ.2200 முதல் விற்கிறோம். இதில் ஓரளவு லாபம் கிடைக்கிறது.
நிலத்தில் விழுந்த இலை, தழை, சருகுகளை குவித்து வைத்து மண்ணால் மூடிவிடுவோம். இது அப்படியே உரமாகி விடும். தோட்டத்தை சுத்தமாக பராமரிப்பது தான் முக்கியம்.
மீதமுள்ள நிலத்தில் ஜாதிக்காய், கிராம்பு வளர்க்கிறேன். காபிச்செடியில் ஊடுபயிராக ஏக்கருக்கு 20 கிராம்பு பயிரிட்டுள்ளேன். இது மரம். அதிகமாக வைத்தால் மரத்துக்கு மரம் உரசும். இரண்டிலும் இன்னும் வருமானம் பார்க்கவில்லை. கிராம்பு குளிர்பிரதேசத்தில் நன்றாக வளரும்.
கேரளாவில் இருந்து நாற்று வாங்கி வந்தேன். ஹைபிரிட், நாட்டு ரகம் உள்ளது. நாட்டு ரகம் ஐந்தாண்டில் காய்ப்புக்கு வரும். ஹைபிரிட் ரகத்தில் மூன்றாண்டுகளில் காய்ப்பு கிடைக்கும். மரத்தில் இருந்து கிராம்பு பறிக்க முடியாது. மரத்தைச் சுற்றி கீழே தார்ப்பாய் விரித்து சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
தானாக உதிர்ந்து விழும் கிராம்புகளை சேகரிக்க வேண்டும். மானாவாரி பயிராக நடவு செய்துள்ளேன். மழை பெய்யும் போது நன்றாக வளரும். பெரியகுளத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியூர் கிராமத்திற்கு நடந்து தான் செல்கிறோம். தோட்டத்தில் தங்கி விளைபொருட்களை பறித்து வீடு திரும்புகிறோம். ஆனால் இயற்கை விவசாயம் செய்வது சந்தோஷமாக உள்ளது என்றார்.
இவரிடம் பேச: 99945 88497
-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

