/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: இன்னொரு மாணவர் விழா!
/
விசேஷம் இது வித்தியாசம்: இன்னொரு மாணவர் விழா!
PUBLISHED ON : பிப் 08, 2026

பிப்.,11 - புத அனுராதா
மா ணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகிறோம். இதே போல, இன்னொரு சிறப்பான நாளும் ஆண்டில் எப்போதாவது ஒரு முறை வரும். அது தான், புத அனுராதா.
அனுராதா என்றால், அனுஷ நட்சத்திரம். புதன் கிழமையும், அனுஷ நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் இது.
'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது!' என்று ஒரு பழமொழி நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. மற்ற கிழமைகளை விட, புதன்கிழமை மிகவும் மவுசு மிக்கதோ என்று இந்த பழமொழி யோசிக்க வைக்கிறது.
இந்த பழமொழியின் அர்த்தமே வேறு. புதன் கிரகம் கல்விக்குரியது. ஒருவரது ஜாதகத்தில், புதன் சுப இடத்தில் இருந்தால், கல்வி நன்றாக இருக்கும்.
ஒருவருக்கு பணம் நிறைய கிடைக்கலாம். ஆனால், அதை பயனுள்ள வழிகளில் செலவழிக்க வேண்டும். ஆடம்பரத்திலும், கெட்ட வழக்கங்களிலும் ஈடுபட்டு சம்பாதித்ததை இழந்து விடக்கூடாது. அதற்கு, நல்ல கல்வியறிவு வேண்டும். சரி... படித்தால் மட்டும் போதுமா? படித்தவர்களும் கூட மதுவுக்கு அடிமையாகின்றனர். இதை சரிக்கட்டுவது எது? புதன் கிரகம் தான்.
புதன் யாருக்கு யோகமான இடத்தில் இருக்கிறாரோ, அவர் படித்தவராகவும் இருப்பார். நல்ல சிந்தனைகளுக்கு சொந்தக்காரரான அறிவாளியாகவும் இருப்பார். எனவே, எவ்வளவு பொன்னும், பொருளும் கிடைத்தாலும், அதைப் பாதுகாக்கும் நல்ல அறிவும், கல்வியும் தரும் புதன் கிரகம் சரியாக அமைய வேண்டும் என்பதையே, பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது, என்கின்றனர்.
அதிலும், புதன்கிழமை அனுஷ நட்சத்திரத்துடன் இணைந்தால், அன்றைய தினம் பொன்னான நாளாக இருக்கும். ஒருவரது ஜாதகத்தில், புதன் தோஷ நிலையில் இருந்தாலும் சரி, நல்ல நிலையில் இருந்தாலும் சரி... அவர்கள் புதன்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் இணையும் நாளில், லட்சுமி நாராயணர் வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக, மாணவர்கள், லட்சுமியுடன் பெருமாள் இருக்கும் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லறிவைப் பெற வழிவகுக்கும்.
அனுஷ நட்சத்திரத்திற்கு உரிய கிரகம், சனி. இவர் நியாயஸ்தர். புத அனுராதா நாளில், பெருமாள் வழிபாடு மேற்கொண்டால், இக்கட்டான நிலைகளில் இருந்து விடுவிப்பார், சனீஸ்வரர்.
அனுஷ நட்சத்திரம், மகாலட்சுமிக்கு உரியது. இவள் பாற்கடலில் தோன்றியவள். சந்திரனும் பாற்கடலில் தோன்றியவர். எனவே, சந்திரன், மகாலட்சுமிக்கு சகோதர முறை வேண்டும். இந்த சகோதரனின் பிள்ளை தான், புதன். எனவே, புதனை மகாலட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். புத அனுராதா நாளில், மகாலட்சுமியை வழிபடுவோருக்கு செல்வச்செழிப்பு ஏற்படும்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்குமோ என்னவோ! புத அனுராதா கிடைப்பது அரிதான விஷயம். எனவே, அரிதாக வாய்த்துள்ள புத அனுராதா நாளில், மகாலட்சுமி சமேத பெருமாளை வழிபட்டு நற்பலன்களை பெறுவோம்.
தி. செல்லப்பா

