PUBLISHED ON : ஜன 28, 2024

மீண்டும் கை கொடுத்த, மணிரத்னம்!
தனி ஒருவன் படத்திற்கு பின், ஜெயம் ரவி நடித்த படங்கள் எல்லாமே, 'ப்ளாப்' ஆகி வந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் நடித்த, பொன்னியின் செல்வன், அவருக்கு மீண்டும் வெற்றியாக அமைந்தது. அதன் பின், அவர் நடித்த, இறைவன் மற்றும் அகிலன் படங்களும் மீண்டும் ஊத்திக் கொண்டன.
இந்நிலையில், கமலை வைத்து, தான் இயக்கும், தக்லைப் படத்தில், ஜெயம் ரவிக்கு, முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார், மணிரத்னம். இதன் காரணமாக, 'பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு, இந்த படமும் எனக்கு வெற்றி படமாக அமையும்...' என்று, உற்சாகத்தில் காணப்படுகிறார், ஜெயம் ரவி.
சினிமா பொன்னையா
கட்டுடலுக்கு மாறும், பிரியா பவானி சங்கர்!
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும், பிரியா பவானி சங்கர், அசைவ நடிகையாகவும் உருவெடுத்துள்ளார். மாடர்ன் உடை அணிந்து நடிக்கும் போது, அவரது உடல் கட்டில் நெளிவு சுளிவுகள் இல்லை என்று இயக்குனர்கள் முகம் சுழித்துள்ளனர்.
அதனால், பயிற்சியாளரை நியமித்து, தன் உடல் கட்டை கட்டுக்கோப்பாக்கும் தீவிர, 'ஜிம்னாஸ்டிக்' பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், பிரியா பவானி சங்கர்.
எலீசா
மீண்டும் வில்லனாக அரவிந்த்சாமி!
ரோஜா நாயகன், அரவிந்த்சாமி, தனி ஒருவன் படத்தில், வில்லனாக மிரட்டியதை அடுத்து, சரியான வில்லன் கதாபாத்திரங்கள் வராததால், மீண்டும், 'ஹீரோ'வாக நடித்து வந்தார். இந்நிலையில், கார்த்தி நடிக்கும், 27வது படத்தில், தனி ஒருவன் படத்துக்கு இணையான வில்லன் கதாபாத்திரம் கிடைத்ததை அடுத்து, மறுபடியும், வில்லன் கோதாவில் குதித்து விட்டார்.
அதோடு, 'ஹீரோகளுடன் வெறும் சண்டை மட்டுமே போடும், வில்லன் வேடங்களாக இல்லாமல், போட்டி போட்டு நடிக்க கூடிய, வில்லன் கதாபாத்திரங்களுடன் வாருங்கள்...' என்று, இயக்குனர்களுக்கு, அழைப்பு விடுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை
டான் நடிகைக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த போதும், 'ஹீரோ'களிடம், அவர் அணுசரணையாக நடந்து கொள்ளாததால், யாரும், அவருக்கு சிபாரிசு செய்யவில்லை. இதனால், அடுத்தடுத்து, 'ஹிட்' படங்களில் நடித்த போதும், முன்வரிசை நடிகை பட்டியலில் அவரால் இடம்பெற முடியவில்லை.
இதையடுத்து, சினிமா சூட்சுமத்தை சில சீனியர் அம்மணியர், அவரது காதில் ஓதியதை அடுத்து, தற்போது, மேல் தட்டு, 'ஹீரோ'களுக்கு துாது விடுகிறார், டான் நடிகை.
முன்பெல்லாம் படப்பிடிப்பு தளங்களில், 'ஹீரோ'களுடன் எதிரும், புதிருமாக இருந்து வந்தவர், இப்போது, அவர்களை தேடிச் சென்று, கடலை போட துவங்கி இருக்கிறார்.
சினி துளிகள்!
* மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிக்கும் தக்லைப் படத்தில் அவருக்கு ஜோடியாக, த்ரிஷா நடிக்கிறார். இந்நிலையில், கமலுடன் விருமாண்டி படத்தில், ஜோடியாக நடித்த, அபிராமியும் அப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
* தனுஷுடன், கேப்டன் மில்லர் படத்தில் நடித்ததை அடுத்து, ஜெயம் ரவியுடன், பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.
* லவ் ஸ்டோரி படத்தை அடுத்து, மீண்டும், நாகசைதன்யாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார், சாய் பல்லவி. அப்படத்துக்காக ஆந்திராவில் உள்ள, ஸ்ரீகாகுளம் வட்டார வழக்கில் பேசி நடிப்பதற்கு, பயிற்சி எடுத்துள்ளார்.
* மாதவனுக்கு ஜோடியாக, நளதமயந்தி என்ற படத்தில் நடித்தார், மலையாள நடிகை, கீது மோகன்தாஸ். மூத்தோன் என்ற பெயரில், மலையாள படத்தை இயக்கியவர், தற்போது, கேஜிஎப் பட நாயகன்,, யஷ் நடிப்பில், டாக்ஸிக் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தில், தற்போது 37 வயதாகும் யஷ்க்கு ஜோடியாக, 43 வயதாகும், பாலிவுட் நடிகை, கரீனா கபூர் நடிக்கிறார்.
* கோயம்புத்தூர் அருகே வளவாடி கிராமத்தில், தென்னை மரங்கள் சூழ்ந்துள்ள தோட்டத்தில், பண்ணை வீடு ஒன்றை கட்டி, கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ளார், நடிகர் சத்யராஜின் மகன், சிபிராஜ்.
அவ்ளோதான்!
