
'தமிழ் கவிஞர்கள் ஒரு பார்வை!' என்ற நுாலிலி ருந்து: த மிழகத்தைச் சேர்ந்த அந்த கால திரைப்பட கவிஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.
பாரதிதாசன்: நீரு பூத்த நெருப்பு. வெளித் தோற்றத்தில் அமைதிக்குன்று; கிளறினால் அக்னிப் பிரவாகம்.
வாலி: மறைப்பு விஷயமே கிடையாது. நேருக்கு நேர் அக்னி போல் துடிப்பு! அதில், எதிரியின் துடிப்பு பஸ்பமாகும்.
உடுமலை நாராயணகவி: தனக்குள்ளேயே உறவாடிக் கொள்ளும் நபர். அவருடன் நிறைய பேச நினைத்து செல்பவர்களுக்கு மவுனம் தான் மிஞ்சும்.
கண்ணதாசன்: கலகலப்பு ஆசாமி. உலகின் அனைத்து விஷயங்களையும் அலசுவார்; ஆனால், பாடல் எழுதும் போது அமைதியாகி விடுவார்; பிறகு கலகலப்பு.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: குழந்தை மாதிரி. பாடல்களில் தென்படும் மேதாவித்தனம், பேச்சில் இருக்காது.
தஞ்சை ராமையாதாஸ்: ஜாலியாகவும், படு சீரியசாகவும் எழுதுபவர். இவரிடம், 'ஜாலிலோ ஜிம்கானா' பாட்டும் உண்டு. 'ஒரு சாண் வயிறு இல்லாட்டா, உலகத்தில் ஏது கலாட்டா?' போன்ற தத்துவப் பாடல்களும் உண்டு.
மருதகாசி மற்றும் கா.மு.ஷெரிப்: தெளிந்த நீரோடை மாதிரி அமைதியின் அடையாளமாக இருந்தனர். 'மார்டன் தியேட்டர்ஸ்' பட தயாரிப்பு நிறுவனத்தில், ஆஸ்தான கவிஞர்கள், இவர்கள்.
************
எழுத்தாளரும், பயணக் கட்டுரையாளருமான பிலோ இருதயநாத் எழுதிய, 'தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு!' என்ற நுாலிலிருந்து : அ திர்ச்சியூட்டும் அந்த கால தண்டனைகள் பற்றி அறிந்து கொள்வோமா?
பெண்களை பலவந்தப்படுத்தினால்...
* முட்டி போட்டு, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் துாக்கி, கைவிரல்களை கூப்பாமல் விரிக்க வேண்டும். அந்த விரல்களின் மத்தியில், ஒரு இயந்திரத்தை மாட்டுவர். அது, பத்து விரல்களையும், 'டக்'கென்று துண்டித்து விடும். 'பெண்களை பலவந்தப் படுத்தினால் இதுதான் தண்டனை...' என்று விரல்கள் துண்டிக்கப்பட்டவனை தெருக்களில் அனைவரும் காணும்படி நடக்க விட்டு விடுவர்.
திருடன் என்றால்...
* அவனுடைய முதுகில், இரும்பை காய்ச்சி சூடு வைப்பர்
* இடது காலில் வளையம் போட்டு ஒரு துாணுடன் இணைப்பது; கழுத்தில் வளையம் மாட்டி, அதையும் அதே துாணில் இணைப்பது. குற்றவாளி உட்காரவும், நீட்டவும் முடியுமே தவிர, இரவு நேரங்களில் படுத்து துாங்க முடியாது
* இரும்புச் சங்கிலியால் அவன் கையை கட்டி, தெருத் தெருவாக அடித்துக் கொண்டே வருவர்
சிறு குற்றங்கள் செய்கிறவர்களை...
* முழங்காலில் நிற்க வைத்து, இரு கைகளையும் பிடித்துக் கொள்வர். பிறகு, 'டேபிள் டென்னிஸ்' விளையாடும், பேட்டை எடுத்து, ஓங்கி இரு கன்னத்திலும், 12 அடி அடிப்பர். மூன்று, நான்கு அடிகள் வாங்கும் போதே ரத்தம் வடிய ஆரம்பித்து விடும். இது ஆற, பல நாட்களோ, மாதங்களோ ஆகலாம்.
பயப்படாதீர்கள்... இதெல்லாம் இங்கல்ல, சீன தேசத்தில் வழங்கப்பட்ட அந்த கால தண்டனைகள்!
நடுத்தெரு நாராயணன்

