PUBLISHED ON : ஏப் 26, 2026

வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்!
சமீபத்தில், வேலை முடிந்து இரவு, 8:00 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். இருபக்கமும் புதர்கள் மண்டி கிடக்கும் ஓரிடத்தில், குழந்தைகள் விளையாடும் சிறிய அளவுள்ள டார்ச் லைட் ஒன்று எரிந்த நிலையில் காட்சியளித்தது.
எங்களின் கவனம் அந்த வெளிச்சத்தின் மீது படவே, வண்டியை நிறுத்திவிட்டு அந்த வெளிச்சத்தை நோக்கி சென்றோம். இரண்டு மீட்டர் துாரம் தான் நகர்ந்திருப்போம். திடீரென அந்த வெளிச்சம் பின்னோக்கி சென்றது. செய்வதறியாது திகைத்து, மீண்டும் தொடர்ந்தோம். மீண்டும் அந்த வெளிச்சம் பின்னோக்கியே நகர்ந்தது.
இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்று நினைத்து, உடனே அங்கிருந்து பின்வாங்கி, எங்கள் வாகனத்தில் வீட்டுக்கு பறந்தோம்.
இரண்டு நாட்களுக்கு பின், நாங்கள் டார்ச் லைட்டை பார்த்த பகுதியில், வழிப்பறி கொள்ளையர்கள் போலீசிடம் சிக்கியதாக நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. அச்செய்தியை விபரமாக படித்த போது, அப்பகுதியில், டார்ச் லைட்டை எரியவிட்டு, அது என்னவென்று பார்க்க வருபவர்களிடம், கொள்ளையடிப்பவர்கள் எனவும், சிறிய அளவுள்ள டார்ச்லைட்டுகள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் அவர்களிடம் இருந்ததாகவும், செய்தியில் இருந்தது.
வாசக நண்பர்களே... இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் பயணிப்பவரா நீங்கள்? மேற்கூறிய சம்பவம் போன்று ஏதாவது வெளிச்சம் தென்பட்டால், அதை தெரிந்து கொள்ளும் ஆவலில் பின் தொடர்ந்து, ஆபத்தில் சிக்கி கொள்ளாதீர். காவல் துறைக்கு தகவல் கொடுத்து விடுங்கள்.
- ரா.ராஜ்மோகன், திண்டிவனம்.
கல்வி கற்கும் ஆர்வம் இருந்தால்...
எங்கள் பகுதியில் வசிக்கும், தெரிந்த பெண் ஒருவர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவருடைய வறுமையான குடும்பச் சூழ்நிலையால், மேலே படிக்க முடியாமல், ஹோட்டல் ஒன்றில், பாத்திரம் துலக்கும் பணியில் சேர்ந்தார்.
அங்கு சென்ற பிறகு, உடன் பணிபுரியும் பெண்களின் துாண்டுதலால், பகுதி நேரமாக டுடோரியலில் சேர்ந்து படித்தார்.
அவருடைய முயற்சி மற்றும் ஆர்வத்தின் காரணமாக, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால், அவருக்கு, ஹோட்டலில் பதவி உயர்வு கிடைத்தது. பாத்திரம் துலக்கும் பணியிலிருந்து, உணவு வழங்கும் ஸ்டால் பொறுப்புக்கு மாற்றப்பட்டார்.
அதோடு நிற்காமல், தொலைதுாரக் கல்வி மூலம் பட்டப் படிப்பில் சேர்ந்தார், அப்பெண். கடினமாக உழைத்து படித்து, முதல் முயற்சியிலேயே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார்.
இப்போது, அதே ஹோட்டலில் அப்பெண், சூப்பர்வைசராக பதவி உயர்வு பெற்று, நல்ல சம்பளமும் பெறுகிறார்.
மன உறுதி மற்றும் விடாமுயற்சியோடு, கல்வி கற்கும் ஆர்வம் இருந்தால், வாழ்க்கையில் உயர முடியும் என்பதற்கு, அந்தப் பெண்ணே நல்ல உதாரணம்.
- எம்.முகுந்த், கோவை.
கணவனின் அழகு, மனைவியின் இதயத்தில்!
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த போது, வீட்டில் அவருடைய திருமண வரவேற்பு நாளன்று மனைவியுடன் நின்று எடுத்த படம் ஒன்று புதிதாக இருந்தது. அதை பார்த்ததும், 'என்ன திடீரென்று திருமணம் நடந்து, இவ்வளவு வருடத்திற்கு பிறகு, இந்த படத்தை இங்கே வைத்திருக்கே...' என்று நான் கேட்டவுடன், 'இந்த படத்தில் ஒரு பெரிய ரகசியமே இருக்கு...' என்று கூறியவர், மனைவி தன்னை கன்னத்தில் அறைந்ததாகக் கூறினார். அதிர்ந்த நான், 'என்னப்பா படத்தை பற்றி கேட்டா, நீ, உன் மனைவி அறைந்ததாக, சம்பந்தம் இல்லாம பேசறே...' என்றேன். 'சம்பந்தம் இருக்கு...' என்றவாறு, 'வெளிநாட்டிலிருந்து வந்த என் மகள், எங்கள் 45வது திருமண நாள் பரிசாக, இந்த படத்தை இங்கே வைத்தவள், என்னையும் என் மனைவியையும் அழைத்து காட்டினாள். அப்போது, மகள், என்னிடம், 'எப்படி சப்பை மூக்குள்ள உங்களை, அம்மா திருமணம் செய்துகிட்டாங்க...' என்று விளையாட்டாக கேட்க, 'நீ, இதை உன் அம்மாவிடமே கேளு...' என்று நான் சொன்னேன். உடனே, அருகில் இருந்த, என் மனைவி, என்னை பார்த்து, 'உங்களைப் பிடிக்காமலா திருமணம் செய்துகிட்டேன்...' என்று அன்பாக என் கன்னத்தில், அறைந்ததாக கூறினார்.
அப்போதுதான் எனக்குப் புரிந்தது, அவர் சொன்ன அந்த ரகசியம் என்னவென்று, 'அழகு உருவத்தில் இல்லை. அவரவர் இதயத்தில்தான் இருக்கிறது...' என்று.
- ஆர். குமார், சென்னை.
