
திருவாரூர், வடபாதிமங்கலம் சோமசுந்தரம் முதலியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
அன்று இரண்டாவது பாடவேளையாக தமிழ் வகுப்பு. ஓய்வு பெறும் நிலையில் இருந்த தமிழாசிரியர் ராமச்சந்திரன், வயது மூப்பால் உடல்நலம் குன்றி தளர்ச்சியாக இருந்தார். வந்தவுடன், 'களைப்பாக இருப்பதால் சிறிது ஓய்வு எடுக்கிறேன். அமைதியாக புத்தகத்தை படியுங்கள்...' என்று அமர்ந்திருந்த நாற்காலியிலே கண்ணயர்ந்து விட்டார்.
வகுப்பின் இரண்டு பிரிவுகள் இரண்டாம் மாடியில் ஒரே கொட்டகையில் இருந்தன. நடுவில் திரை போட்டு பிரிக்கப்பட்டிருந்தன. நாங்கள் தெற்கு முகமாகவும், மற்றொரு பிரிவு மாணவர்கள் வடக்கு முகமாகவும் அமர்ந்திருப்போம். அந்த பிரிவுக்கு தமிழ் பாடம் நடத்திய ஆசிரியர் சண்முகவடிவேல், பட்டிமன்றம், மேடை பேச்சில் கலக்கி வந்தார். அவர் பாடம் நடத்த துவங்கினால் எங்கள் கவனம் அங்கு போய்விடும். அன்றும் அவ்வாறு நடந்தது.
அந்நேரம், தலைமையாசிரியர் சுந்தரம் வளாகத்தை கண்காணித்தபடி வலம் வந்தார். எங்கள் வகுப்பில் ஆசிரியர் துாங்கியதைக் கண்டதும் கோபத்தில் விசாரித்தார். அவரிடம், 'நாங்கள் தான் ஓய்வு எடுக்க கேட்டு கொண்டோம். பக்கத்து பிரிவிலும் தமிழ் வகுப்பு தான் நடக்கிறது. அதை கவனித்துக் கொண்டிருக்கிறோம்...' என எடுத்து கூறினோம். சிரித்தபடியே சென்று விட்டார். பின், விஷயமறிந்து எங்களுக்கு நன்றி சொன்னார் தமிழாசிரியர்.
என் வயது, 70; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் நடந்த அந்த சம்பவத்தை நினைத்தவுடன் உள்ளம் நெகிழ்ந்து விடுகிறது.
- வி.பரமசிவம், சென்னை.
தொடர்புக்கு: 95660 24057

