
அன்புள்ள அம்மா,
நான், 12ம் வகுப்பில் பெயில் ஆன, கிராமத்து இளைஞன். திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவன். எங்கள் கிராமத்தின் பெரிய மனிதர் ஒருவர் வாயிலாக, 'டிவி' தொடரில் உதவி இயக்குனராக பணிபுரிகிறேன். என் தம்பி, நல்ல மதிப்பெண் பெற்று, இன்ஜினியரிங் படிப்பு முடித்தான் .
பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் உள்ள, தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தான். ஆனால், வேலையை தொடர முடியாமல், மீண்டும் கிராமத்திற்கே திரும்பி விட்டான்.
எனக்கு உதவி செய்த அதே பெரிய மனிதர் தயவால், அவன் ஆசைப்பட்ட மாதிரி, வி.ஏ.ஓ.,வின் கீழ் பணிபுரியும் சிப்பந்தி வேலையில் இருக்கிறான். ஆனாலும் தாசில்தார், எம்.எல்.ஏ., - எம்.பி., போன்றோருடன், அவனால் சரளமாக பேச முடிவதில்லை. அவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது, அவனுக்கு தெரியவில்லை. எதுவானாலும், சென்னையிலிருந்து நான் சென்று, பேச வேண்டி இருக்கிறது. என் படிப்பு எங்கே, அவன் படிப்பு எங்கே... மெத்தப் படித்த அவனுக்கு, ஏன் இதுகூட தெரிவதில்லை... படித்து என்ன பயன் அம்மா...
- இப்படிக்கு, சீதாராமன்.
அன்பு சீதாராமன்,
கல்லுாரி பட்டங்களுக்கும், உலக வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை, மகனே. ஏட்டுக் கல்வி என்பது வேறு; நடைமுறை வாழ்க்கை வேறு. கல்லுாரிக்கு சென்று பேராசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனித்து விட்டு, வீட்டினுள் முடங்கி கிடப்போருக்கும், நண்பர்களுடன் அரட்டை அடித்து மொபைல்போனில் மூழ்குவோருக்கும், உலக ஞானமோ, பொது அறிவோ எப்படி ஏற்படும்...
இவர்கள் செய்தித்தாள்கள் கூட வாசிக்காதவர்கள்; 'டிவி'யில் கூட செய்திகள் பார்க்காதவர்கள். நாட்டு நடப்புகளில் அக்கறையற்றவர்கள்; நான்கு பேருடன் பழகாதவர்கள்.
ஆனால், நீ அப்படியல்ல... அதிகம் படிக்காது போனாலும், பல தரப்பட்ட மனிதர்களுடன் பழகுகிறாய். அவர்களுடன் பேசுகிறாய்; விவாதிக்கிறாய். உன் சூழ்நிலை, உனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. பாட புத்தகங்களை படிப்பதை விட, மனிதர்களை படிக்க கற்றுக் கொண்டு விட்டாய்.
உலகத்துடன் சேர்ந்து வாழ உனக்கு தெரிகிறது. எந்தெந்த மனிதர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரிகிறது. எந்தெந்த விஷயங்களை எப்படி கையாள வேண்டுமென புரிகிறது.
'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்' என, திருவள்ளுவர், 140வது குறளில் கூறியுள்ளார்.
பல தரப்பட்ட மனிதர்களுடன் பழகுவதும், பல வகை மக்களுடன் பேசுவதும், உண்மை தகவல்களை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்வதும், தெரிந்து கொண்டவற்றின்படி நடப்பதும் தான், உலக ஞானம். கல்வி கற்பதுடன், இந்த அறிவும் பெறுவது தான் நிஜமான கல்வி. அப்படி இருப்போரே, கல்விமான்கள்; அவர்களே, உலக ஞானம் பெற்றவர்கள்.
அதனால் தான், 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பர்.
- இப்படிக்கு, இந்துமதி

