PUBLISHED ON : மே 14, 2026 08:01 AM

1. ஹாங்காங் பல்கலை விஞ்ஞானிகள் 'உயிருள்ள பிளாஸ்டிக்'கை உருவாக்கியுள்ளனர். பிளாஸ்டிக்கின் மூலப்பொருளோடு உறக்க நிலையில் உள்ள பாக்டீரியாக்களை சேர்த்துள்ளனர். வெப்பமும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்போது உறங்கும் பாக்டீரியாக்கள் துாண்டப்பட்டு, சில என்சைம்களை சுரக்கின்றன. இந்த சுரப்பினால் சில நாட்களிலேயே பிளாஸ்டிக் சிதைந்து மக்கிவிடும்.
![]() |
2. ஆஸ்திரேலியாவிலுள்ள 'எர்த் ஏஐ'யின் ஆய்வாளர்கள், தாமிரம் மற்றும் கோபால்ட் போன்ற அரிய கனிமப் படிமங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர். இதன் அல்காரிதம்கள் புவியியல் தரவுகளை மிக வேகமாக ஆய்வு செய்து, கனிமத்தை தோண்ட எங்கு துளையிடலாம் என்று துல்லியமாகக் கண்டறிகின்றன.
![]() |
3. பட்டாம்பூச்சி இறக்கைகளின் அமைப்பை முன்மாதிரியாக வைத்து, நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமையான கட்டுமான முறையை ஜப்பான் மற்றும் சீன ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த பல்நுண் அடுக்குகளைக் கொண்ட இந்த கட்டட அமைப்பு, அதிர்வுகளை பெற்றுக்கொண்டு சீராகப் பகிர்வதன் மூலம் சேதத்தைக் குறைக்கிறது.
![]() |
4. நிலவில் விண்கற்கள் மோதுவதால் விண்வெளிக்கு எகிறும் கல் சிதறல்கள், பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என, கனடாவின் வெஸ்டர்ன் ஒன்டாரியோ பல்கலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பாறைத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தால் எரிந்து சாம்பலாகும். என்றாலும், தப்பித்த சில கற்கள் விமானங்களையும் பதம் பார்க்ககூடும்.
![]() |
5. கனடாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், உலகின் முதல் ஹைட்ரஜன் ஹெலிகாப்டரை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளனர். அவசரகால உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காக தொலைதுாரப் பகுதிகளுக்கு உடல் உறுப்புகளை விரைவாகவும் துாய்மையான எரிபொருள் வாயிலாகவும் கொண்டு செல்ல இத்தொழில்நுட்பம் வழிவகுக்கும்.




