PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

1. நீண்டகாலம் உழைக்கும் துணிகள், காயங்களுக்கான தையல் நுால், குறைந்த எடை கவசங்கள் தயாரிக்கச் சிலந்தியின் வலை நார் இழைகள் பயன் படுகின்றன. ஆனால், இவற்றைப் பட்டுநுால் போல் பெரிய அளவில் உற்பத்தி செய்ய இயலாது. அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பயோடெக் கம்பெனி எனும் நிறுவனம், பட்டுப் புழுக்கள் உடலில் சிலந்தி மரபணுவைச் செலுத்தி வெற்றிகரமாக இழைகளை உற்பத்தி செய்துள்ளது.
![]() |
2. நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க, நாம் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உண்கிறோம். ஆனால், காபி குடிப்பது சில விதமான ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் வீரியத்தைக் குறைத்துவிடும் என்று ஜெர்மனியின் டூபிங்கன் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
![]() |
3. மது குடிப்பது குடலில் உள்ள தீய பாக்டீரியாக்களைக் கல்லீரலுக்குள் தள்ளி, கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வு வாயிலாக நிரூபித்துள்ளது.
![]() |
4. ரோபோக்களால் காட்சி, ஒலி ஆகியவற்றை உணர முடியும். ஆனால், சுவையை அறிய இயலாது. சீனாவைச் சேர்ந்த பெய்ஜிங் தேசிய நானோ தொழில்நுட்ப மையம் கிராஃபீன் ஆக்ஸைட் அயனிகளைப் பயன்படுத்தி, சுவை அறியும் தன்மையை ரோபோக்களுக்குக் கொடுத்துள்ளது.
![]() |
5. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், உடலில் அசிடோன் அளவு அதிகரிக்கும். வாயால் ஊதினால் வரும் காற்றில் அசிடோனைக் கண்டறியும் கருவியை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலை கண்டறிந்துள்ளது. இதன் வாயிலாக ரத்த மாதிரி எடுக்காமலேயே ரத்த சர்க்கரை அளவை அறிய முடியும்.