/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
எழுத்தறிவுக்கு முன்பே பிறந்ததா எண் அறிவு?
/
எழுத்தறிவுக்கு முன்பே பிறந்ததா எண் அறிவு?
PUBLISHED ON : பிப் 12, 2026 07:29 AM

வடக்கு மெசபடோமியாவின் ஹலாபிய கலாசாரத்தைச் சேர்ந்த 8,000 ஆண்டுகள் பழமையான மண்பாண்டச் சில்லுகளை ஆய்வாளர்கள் அண்மையில் ஆய்வு செய்தனர். பானைச் சில்லுகளின் மேல் பொறிக்கப்பட்டிருந்த பூக்கள் மற்றும் தாவரச் சித்திரங்கள் வெறும் அலங்காரங்கள் மட்டுமல்ல, அவற்றை வரைந்தவர்களுக்கு ஆழமான கணிதப் புரிதல் இருந்திருக்க வேண்டும் என்று 'தி ஜர்னல் ஆப் வேர்ல்டு ப்ரீ-ஹிஸ்டரி' இதழில் வெளியான ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்த மண்பாண்டங்களில் உள்ள இதழ்கள் 4, 8, 16, 32, 64 என இரட்டிப்பாகும் வரிசையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எழுத்து வடிவில் முறையான எண்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பே, சமச்சீர் தன்மை மற்றும் இலக்க இடம் சார்ந்த புரிதல் அக்கால மனிதர்களிடம் இருந்ததை இந்த வடிவியல் கோலங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இது வெறும் கலை வெளிப்பாடு மட்டுமல்ல; அன்றாட கிராமப்புற வாழ்வில் நிலத்தைப் பிரிப்பதற்கும், விளைச்சலைப் பகிர்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தேவையான தர்க்க அறிவின் வெளிப்பாடுதான் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எழுதப்பட்ட எண்கள் இல்லாமலேயே, விகிதாச்சாரம் மற்றும் சமநிலை குறித்த தெளிவான சிந்தனை அப்போதைய மனிதர்களுக்கு இருந்துள்ளது.
எழுத்து முறைகளும், முறையான கணிதக் கோட்பாடுகளும் உருவாவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித மூளை, நுணுக்கமான தர்க்க சிந்தனைகளில் ஈடுபட்டுள்ளது. மனிதப் படைப்பாற்றலில் இருந்தே கணித அறிவு உருவாகியுள்ளது என்பதை இந்த ஆய்வு உலகுக்கு உணர்த்துகிறது.

