/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தேர்தல் செலவுக்காக முன்கூட்டியே 'கமிஷன்' ஒப்படைப்பு?
/
தேர்தல் செலவுக்காக முன்கூட்டியே 'கமிஷன்' ஒப்படைப்பு?
தேர்தல் செலவுக்காக முன்கூட்டியே 'கமிஷன்' ஒப்படைப்பு?
தேர்தல் செலவுக்காக முன்கூட்டியே 'கமிஷன்' ஒப்படைப்பு?
PUBLISHED ON : ஜன 29, 2026 04:19 AM

''த மிழக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருத்தர், நம் நாட்டின் தலைநகரான டில்லி கமிஷனர் பதவியில் அமர்ந்துடணும்ன்னு காய் நகர்த்திட்டு வராறாம்ங்க...'' என்றபடியே பேச்சை துவக்கினார் அந்தோணிசாமி.
''யாருங்க அது...'' என்றார், அன்வர்பாய்.
''தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., பதவிக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,க்கு தமிழக அரசு பட்டியல் அனுப்பி வச்சுது... அதுல, தமிழகத்தை சேர்ந்த மூன்று மூத்த காவல்துறை ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பெயரை இறுதி செய்து, தமிழக அரசுக்கு, யு.பி.எஸ்.சி., அமைப்பு பட்டியல் அனுப்பிடிச்சு...
''இம்மாதம் புதிய டி.ஜி.பி., நியமிக்கப்படலாம்னு தகவல் கசிஞ்சாலும், அதுமாதிரி எந்த அசைவும், தமிழக அரசுகிட்ட இருந்து வரலை...
''சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., ஆக தகுதி இருந்தும், நமக்கு கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதோங்கிற சந்தேகத்துல, மூன்று, ஐ.பி.எஸ்., அதிகாரிகள்ல ஒருத்தர், மத்திய அரசு பணியில் சேர, வலை வீசிட்டு இருக்காராம்...'' என்றார் அந்தோணிசாமி.
''ராஜஸ்தான்ல இளைஞர் நலம், விளையாட்டுத் துறை அமைச்சர் பேர் என்ன வே... ரத்தோரா...'' என, சம்பந்தமே இல்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டபடியே, ''சீனியர்களை புறக்கணிக்க திட்டமிட்டிருக்கிறதால, அவங்கல்லாம் கடும் அதிருப்தியில் இருக்காவ வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சியில ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''அ.தி.மு.க.,வுல தான் வே... பொதுச்செயலர் பழனிசாமி, கொங்கு மண்டலத்துல இருக்கற மூத்த தலைவர்களுக்கு, ஓய்வு தர திட்டமிட்டிருக்காரு...
''வர இருக்கற சட்டசபை தேர்தல்ல, அவிநாசி எம்.எல்.ஏ., தனபால், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமிக்கெல்லாம் இம்முறை, 'சீட்' இல்லைன்னு சொல்லுதாவ வே...
''இதனால, மூத்த தலைவர்கள் பலரும், கட்சி மேல அதிருப்தியில இருக்காவ... இவங்களுக்கு சீட் கிடைக்கலைன்னா, அந்த எதிர்ப்பு அலை, அ.தி.மு.க.,விற்கு எதிராக திரும்பும்ன்னு சொல்லுதாவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.
''தேர்தல் செலவுக்கான வசூலா, இல்ல அமைச்சரோட செலவுக்கான வசூலான்னு பரபரப்பா பேசிக்கிறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த அமைச்சருக்கு, யாரெல்லாம் வசூலிச்சு தரான்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''தமிழகத்தில் நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதியான, 'டூரிப்' திட்டம் மூலமா, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்ல சாலைகளை புதுப்பிக்க, சீரமைக்கன்னு ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணிகள் நடக்க இருக்கு...
''நகராட்சி நிர்வாகத்துறையினர் தான் செலவிடப் போறாங்க... இதுவரை, இந்த பணிகளுக்கான கமிஷனை உரிய இடத்தில் சேர்க்கும் வேலையை, அந்தந்த உள்ளாட்சி அதிகாரிகள் பார்த்துக்கிட்டாங்க...
''ஆனா, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நடக்கவுள்ள வேலைகளுக்கான கமிஷனை, நாலு நாளைக்கு முன்னாடி அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் பிரதிநிதிகள், சென்னைக்கு நேரில் போயி, அந்த துறையில் அமைச்சரின் உதவியாளராக உள்ள தாசில்தாரிடம் ஒப்படைச்சிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''ம்... தேர்தல் செலவுக்கு ஆச்சுன்னு சொல்லும் ஓய்...'' என, சிரித்தார் குப்பண்ணா.
பேச்சு முடியவே, பெஞ்ச் அமைதியானது.

